அமைச்சர்கள் ராஜிநாமா: பாக். அரசுக்கு திடீர் நெருக்கடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கூட்டணி ஆட்சியில் இருந்து நவாஸ் ஷெரிப் கட்சி விலகியது. அக்கட்சியின் அமைச்சர்கள் கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளதால் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தேர்தல் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரிப் ஆதரவுடன் பாகிஸ்தானில் ஆட்சி நடத்தி வருகிறது.
அதிபர் முஷாரப் டிஸ்மிஸ் செய்த நீதிபதிகளை, ஆட்சி பொறுப்பேற்ற 30 நாட்களுக்குள் (மே 12ம் தேதிக்குள்) மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று நவாஸ் ஷெரிப் நிபந்தனை விதித்திருந்தார். இந்த கெடு முடிந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஜர்தாரியுடன் ஷெரிப் 3 நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தை தோல்வியடைத்து. இதையடுத்து அமைச்சரவையில் இருந்து விலக ஷெரிப் கட்சி முடிவு செய்தது. அதன்படி அக்கட்சியின் 9 அமைச்சர்களும் தங்களது ராஜிநாமா கடிதங்களை பிரதமர் கிலானியிடம் நேற்று அளித்தனர்.
பிரச்னைகள் அடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சிக்கு தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஷெரிப் அறிவித்துள்ளார். அவர் வசம் இருந்த நிதித்துறை தவிர மற்ற துறைகள் காலியாக வைக்கப்படும். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்ட உடன் அவர்கள் அமைச்சர்களாக தொடருவார்கள் என்று ஜர்தாரி தெரிவித்தார்.
அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால் உடனடியாக நிதியமைச்சர் நியமிக்கப்படுகிறார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்பிக்கள் கூட்டம் இன்று ஜர்தாரி வீட்டில் நடக்கிறது.












Click it and Unblock the Notifications