கடலில் குளித்த சகோதரர்கள் உள்பட 3 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி கடலில் ராட்சத அலையில் சிக்கி சகோதரர்கள் உள்பட 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாயினர்.
தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். தெர்மல் தீயணைப்பு நிலையத்தில் டிரைவராக வேலை செய்கிறார். இவரது மகன்கள் பார்த்திபன், வசந்தராஜ், சிவா (எ) சிவகுமார். பார்த்திபன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இரட்டையர்களான வசந்தராஜூம், சிவாவும் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் விக்னேஷ். 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் கோடை விடுமுறைக்காக தெர்மல் நகரில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு வந்திருந்தார்.
பார்த்திபன், வசந்தராஜ், சிவக்குமார், விக்னேஷ் உள்பட அதேப் பகுதியைச் சேர்ந்த 10 பேர் தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக விருந்தினர் மாளிகைக்கு பின்னால் உள்ள கடற்கரையில் குளித்தனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி பார்த்திபன், சிவா, வசந்தராஜ், விக்னேஷ் ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற 6 பேரும் பீச் போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் கடலுக்குள் சென்று தேடினர்.
அப்போது பார்த்திபன், அவரது தம்பி வசந்தராஜ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். விக்னேஷின் உடல் நள்ளிரவில் கிடைத்தது.