வெடிகுண்டுகளுடன் பிடிபட்ட வள்ளியூர் பஞ். துணைதலைவர்
நெல்லை: நெல்லை அருகே வெடிகுண்டு உள்பட பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற வள்ளியூர் பேரூராட்சி துணைத்தலைவர், அவரது தம்பி மற்றும் மாஜி தலைவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் அண்மையில் நடந்த சில கொடூர கொலை சம்பவங்களையடுத்து குற்றவாளிகளைத் தேடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை அருகே வள்ளியூரில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
காருக்குள் வள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர் சண்முகபாண்டியன், அவரது தம்பி முத்துகிருஷ்ணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமசந்திரன் ஆகியோர் இருந்தனர். கார் சீட்டுக்கு அடியில் வெடிகுண்டுகள், அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து அவர்களை விசாரணைக்காக போலீசார் நெல்லைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்ட சண்முகபாண்டியன், ராமசந்திரன் ஆகியோர் மீது 1991-ல் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து ஏட்டு அருள்ராஜ் என்பவரை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications