2 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழர் நலன் பாதுகாக்கவில்லை- ஜெயலலிதா
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சொந்தமாக வீடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் மின்சார விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் அரிசி கடத்தல் நடக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு அளித்த கடனை தள்ளுபடி செய்துவிட்டு, தள்ளுபடி செய்த தொகையை வங்கிகளுக்கு தராததால் அந்த வங்கிகள் நலிவடைந்துள்ளன.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் அபகரிக்கப்படுகிறது. தோழமை கட்சி தலைவர்கள் தாக்கப்படுகின்றனர். விடுதலைப்புலிகள், நக்சலைட்டுகள் ஊடுருவல், எதிர்கட்சி தலைவர்கள் அரசு அதிகாரிகள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது.
பஸ் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாலாறு, பொன்னை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் முயற்சியை தடுக்கவில்லை. சுயநலத்திற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறுத்தி வைத்தது என திமுக ஆட்சியில் இன்னல்கள் தொடர்கின்றன.
இந்நிலையில் திமுக அரசு சாதனை செய்ததாக விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி அமைந்தால் தமிழக நலன் காக்கப்படும் என்று கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் தமிழர்களின் நலனோ உரிமைகளோ பாதுகாகாக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஏற்கனவே தமிழர்கள் பெற்றிருந்த நலனும், உரிமைகளும் இந்த ஆட்சியில் பறிபோனதுதான் மிச்சம் என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.