குற்றாலத்தில் முன் கூட்டியே குளுகுளு சீசன் அறிகுறி
தென்காசி: குற்றாலத்தில் இந்தாண்டு முன் கூட்டியே குளுகுளு சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் சீசன் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்தாண்டு அந்தமானி்ல் தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்கியதால் கேரளா மற்றும் தமிழகத்திலும் ஒரு வாரம் முன்னதாகவே பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இம்மாத இறுதியில் குற்றால சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றாலத்தில் இந்த ஆண்டு ஏராளமான வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. ரூ.20 லட்சம் செலவில் மெயினருவி கார் பார்க்கிங் விஸ்தரிப்பு, ரூ.15 லட்சம் செலவில் ஜந்தருவியில் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு செல்ல ஒருவழி பாதை அமைக்கும் பணி போன்ற பணிகள் நடந்து வருகிறது.
முன் கூட்டியே சீசன் தொடங்கும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வசதி, பூங்கா சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.