மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி - ஒரு வாரம் ஓய்வு

முதல்வர் கருணாநிதிக்கு கடும் முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்பட்டதால் கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் முதல்வரின் நலம் குறித்து போன் மூலம் விசாரித்தறிந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சைக்குப் பிறகு முதல்வரின் உடல் நலம் வெகுவாக தேறியது. இதையடுத்து நேற்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
நலம் விசாரித்த சோ
கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து சேர்ந்த அவரை முதல் நபராக பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் கால் மணி நேரம் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தார் சோ.
முதல்வர் கருணாநிதி ஒரு வாரத்திற்கு பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி பதவியேற்கும் விழாவில் மட்டும் முதல்வர் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
வீடு திரும்பிய முதல்வரை மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications