தலைமறைவாக இருந்த திண்டுக்கல் சங்கிலி பாபா கைது
திண்டுக்கல்: ஆபாசப் படம் எடுத்தது, இளம் பெண்ணை மிரட்டிக் கல்யாணம் செய்து கொண்டது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக இருந்து பரபரப்பை ஏற்படுத்திய திண்டுக்கல் சங்கிலி பாபாவை போலீஸார் சேலத்தில் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத் அப்துல்லா. இவரது மகள் ஆபிதா (29). இவர் திண்டுக்கல், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், என்னை திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த முகம்மது மதார் என்கிற சங்கிலி பாபா (45) மிரட்டி, மோசடியாக கல்யாணம் செய்து கொண்டார். மேலும் என்னை திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தார். ஆபாசப் படமும் எடுத்தார் என்று கூறியிருந்தார்.
மேலும் சங்கிலி பாபா சட்டவிரோதமாக துப்பாக்கிகளை விற்று வந்ததாகவும் அவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.
இதையடுத்து சங்கிலி பாபாவின் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய சிடிக்கள், போட்டோக்கள், கடிதங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். சங்கிலி பாபா தலைமறைவாகி விட்டார்.
அவரைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று சேலம் லாட்ஜ் ஒன்றில் சங்கிலி பாபா தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினர் சங்கிலி பாபாவை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
அவரை உடனடியாக தாடிக்கொம்பு கொண்டு வந்த போலீஸார் அங்குள்ள காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்று விட்டனர்.
சங்கிலி பாபா பல்வேறு பெண்களை மோசடியாக கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் துப்பாக்கி விற்றதாக ஆபிதா கூறியிருப்பதால் அதுகுறித்தும் போலீஸார் துருவித் துருவி பாபாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் இறுதியில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
சங்கிலி பாபா பல்வேறு பெயர்களை வைத்துள்ளார். அவர் மீது ஏற்கனவே கேரளாவில் ஒரு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதவிர தஞ்சையில் 2 வழக்குகளும், கோவையில் ஒரு வழக்கும் உள்ளன.
சென்னை பூக்கடை, மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களிலும் பாபா மீது வழக்குகள் உள்ளன.












Click it and Unblock the Notifications