திமுக, அதிமுகதான் கொள்கை இல்லாத கட்சிகள் - விஜயகாந்த்
சென்னை: என்னிடம் எந்தக் கொள்கையும் இல்லை என்று கூறுபவர்கள்தான், காங்கிரஸ், பாஜக என மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்குத்தான் கொள்கை இல்லை என்று திமுக, அதிமுகவை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைமுகமாக சாடியுள்ளார்.
சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் முன்னிலையில், காங்கிரஸ் பிரமுகர்கள் சத்யா, அலெக்சாண்டர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேமுதிகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், உங்களைப் போல நிறையப் பேர் தேமுதிகவில் சேர்ந்தவண்ணம் உள்ளனர். இதன் மூலம் எனக்கும் பொறுப்பு கூடிக் கொண்டே இருக்கிறது.
இன்று பொற்கால ஆட்சி என்கிறார்கள். திமுகவும், அதிமுகவும் இந்த மாநிலத்தை மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. ஆனால் விலைவாசி குறையவில்லை. அதைக் கட்டுப்படுத்தாமல் ஒருவர் மீது ஒருவர் பழியைப் போடுகிறார்கள்.
ஹோட்டல் அதிபர்களை அழைத்து உணவுத் துறை அமைச்சர் வேலு பேசியுள்ளார். விலையைக் குறைப்பதாக ஹோட்டல் அதிபர்கள் கூறியுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால் ஹோட்டல் அதிபர்கள் எந்த உத்தரவாதமும் தரவில்லை. அப்படியே விலையைக் குறைத்தாலும் கூடவே உணவுப் பொருட்களின் அளவையும் குறைத்து விடுவார்கள்.
இளைஞர்கள் இன்று வேலையில்லாமல் தவிக்கின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலைக்கு உத்தரவாதம் இல்லை. இதனால்தான் அவர்கள் தீவிரவாதத்தின் பக்கம் சாய நேரிடுகிறது. தீவிரவாதம் முன்பு போல இல்லை, குறைந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நேபாளத்தில் ஆரம்பித்து, கொடைக்கானல் வரை வந்து விட்டது தீவிரவாதம்.
மின்சாரத் தட்டுப்பாடே இல்லை என்கிறார் மின்சாரத் துறை அமைச்சர். ஆனால் தினசரி மின்சாரம் தடைபடத்தான் செய்கிறது.
பரங்கிமலை கண்டோன்மென்ட் வாரியத்திற்குத் தேர்தல் நடக்கிறது. அங்கு நத்தம் புறம்போக்கு இடத்தில் 500 வீடுகள் உள்ளன. அவர்களை மிரட்டியுள்ளனர். திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் காலி செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இப்படி மிரட்டியே தமிழகத்தையே வளைத்து விடுவார்கள்.
மக்கள் நினைத்தால் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும். நான் யாரையும் நம்பி இல்லை. தெய்வத்தையும், மக்களையும் மட்டும்தான் நம்பியுள்ளேன். யாருடனும் எனக்குக் கூட்டணி இல்லை. மக்களிடம் மட்டுமே கூட்டணி.
எனக்கு என்ன கொள்கை என்று கேட்கிறார்கள். மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சமச்சீர் கல்வி, வேலை வாய்ப்பு இன்னும் பல கொள்கைகள் எனக்கு உண்டு.
என்னைப் பார்த்து கொள்கை என்ன என்று கேட்பவர்கள் தான் காங்கிரஸ், பாஜக என்று மாறி மாறி கூட்டணி வைத்து கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்றார் விஜயகாந்த்.