ஆந்திர தடுப்பணைகள: கருணாநிதி தடுக்க ஜெ. வலியுறுத்தல்

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
ஆந்திரா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அரசியல் ஆதாயத்துக்காக தற்போது ஆளும் காங்கிரஸ் அரசு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பொன்னையாற்றின் குறுக்கே 100 தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தடுப்பணைகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை, மைனாரிட்டி திமுக அரசு எடுத்ததாக தெரியவில்லை. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவும், எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கவும், தன் மகனை சில வழக்குகளில் இருந்து தப்பிக்க வைக்கவும், மத்திய அரசை பயன்படுத்திக் கொள்ளும் கருணாநிதி, தமிழகத்தில் உள்ள ஜீவாதாரப் பிரச்னையான பொன்னையாற்று நீர் பிரச்னையில் ஏன் மத்திய அரசை நிர்பந்திக்கவில்லை?
ஒருவேளை இந்தப் பிரச்னையிலும் ஆந்திரா மக்களுக்கு ஆதரவாக, ஆந்திரா சட்டசபை தேர்தல் நடந்துமுடியும்வரை பொறுமை காப்போம். அந்த தேர்தலில் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என அறிக்கை விடுக்கப் போகிறாரா கருணாநிதி?
மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பொன்னையாற்றின் குறுக்கே, ஆந்திரா அரசு கட்டவிருக்கும் அணைகளை தடுத்து நிறுத்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
கருணாநிதியின் மக்கள் விரோதச் செயலை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அவரை தமிழக மக்கள் கைவிடும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என எச்சரிக்கை செய்யவிரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications