கர்நாடகாவில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு
கர்நாடக சட்டசபைக்கு இதுவரை 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 3வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வடக்கு கர்நாடகாவில் உள்ள பெல்காம், தார்வாட், ஹவேரி, பீதர், குல்பர்கா, பீஜப்பூர், பாகல்கோட், காடக் ஆகிய மாவட்டங்களில் 69 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
களத்தில் 699 வேட்பாளர்கள் நிற்கின்றனர். 1.17 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.
தொடர்ந்து 8 முறை ஒரே தொகுதியில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் தரம்சிங், 9வது மறையாக வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைப்பாரா என்பதை நாளைய வாக்குப்பதிவு நிர்ணயிக்கப் போகிறது.
தரம்சிங் தவிர மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நாளைய வேட்பாளர்களில் முக்கியமானவர். கார்கேவும் இதுவரை 8 முறை வெற்றி பெற்றவர். நாளைய வாக்குப்பதிவில் இவரும் சாதனை படைக்கவுள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 25 ஆயிரம் துணை ராணுவப் படையினர் உள்பட 52 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு ஏற்கெனவே கடந்த 10 மற்றும் 16ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவில் 66 சதவீதமும், 2வது கட்ட வாக்குப்பதிவில் 66.3 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.