Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சேகர் - புறநகருக்கு ஜாங்கிட்

Subscribe to Oneindia Tamil

Jankid
சென்னை: சென்னை மாநகருக்கு இரு காவல்துறை ஆணையர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகர ஆணையராக ஆர்.சேகரும், புறநகர் ஆணையராக ஜாங்கிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய ஆணையர் நாஞ்சில் குமரன் வருகிற 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையரகம் இரண்டாகப் பிரிக்கப்படும் என சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி தற்போது ஆணையரகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக தற்போது உள்ள நாஞ்சில் குமரன் வருகிற 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்குப் பதில் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆர்.சேகர், புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சென்னை புறநகர் காவல்துறை ஆணையரக ஆணையராக கூடுதல் ஆணையர் எஸ்.ஆர்.ஜாங்கிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகள் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டன.

'டேப்' சர்ச்சை உபாத்யாயா மாற்றம்!

இதேபோல இன்னொரு முக்கிய மாற்றமாக, தொலைபேசி ஒட்டுக் கேட்பு சர்ச்சையில் அடிபட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநர் உபாத்யாயா மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் புதிய பதவி எதுவும் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு இயக்குநராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சென்னை மாநகர ஆணையராக இருந்தவர். தற்போது போலீஸ் பயிற்சிப் பிரிவு டிஜிபியாக அவர் இருக்கிறார்.

ஜாங்கிட் இதுவரை வகித்து வரும் கூடுதல் ஆணையர் பதவிக்கு புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை.

சென்னை மாநகர காவல்துறை முன்பு இரண்டாகத்தான் இருந்தது. புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய செங்கை கிழக்கு காவல் மாவட்டம், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகர காவல்துறையுடன் இணைத்து ஒர் காவல்துறை ஆணையகரகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

காவல்துறை ஆணையருக்கு உதவியாக கூடுதல் ஆணையர் பதவியும் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக செயல்பாட்டுக்கு இது வசதியாக இல்லை என்பதால் புறநகர்ப் பகுதகிளை தனியாக பிரித்து தனி ஆணையரை நியமிக்கலாம் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதை அரசும் ஏற்றுக் கொண்டு தற்போது மீண்டும் சென்னை காவல்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ள சேகர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எம்.பி. படித்துள்ள இவர் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகியவற்றிலும் புலமை மிக்கவர். 1981ல் காவல்துறைப் பணியில் இணைந்தார்.

முதலில் சிவகங்கையில் உதவி எஸ்.பியாக இருந்தார். பின்னர் நெல்லை, மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக இருந்தார்.

மதுரை மாநகர காவல்துறை ஆணையராகவும் பதவி வகித்துள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து காவல் இணை ஆணையராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். பல குறுகிய சாலைகளை ஒரு வழிப் பாதையாக மாற்றியவர் சேகர்தான்.

சென்னை புறநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்கும் முதல் அதிகாரி என்ற பெருமை ஜாங்கிட்டுக்குக் கிடைத்துள்ளது. அதிரடி அதிகாரியான ஜாங்கிட், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

அம்பாசமுத்திரம் உதவி எஸ்.பியாக காவல் பணியை ஆரம்பித்த இவர் தற்போது சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பதவி வகித்து வருகிறார்.

மதுரை நகர ஆணையராகவும், மதுரை சரக டிஐஜியாகவும் இருந்துள்ளார். தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் எஸ்.பியாக இருந்தபோது தனது அதிரடி நடவடிக்கையால் கள்ளச்சாராயத்தையும், குற்றவாளிகளையும் ஓட ஓட விரட்டினார்.

நெல்லை ஆணையராகவும் விளங்கிய ஜாங்கிட் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இவர் பணியாற்றிய இடங்களிலெல்லாம் ரவுடித்தனமும், கள்ளச்சாராயமும் அறவே இல்லாத நிலையை உருவாக்கியவர்.

வடக்கு மண்டல ஐஜியாக இவர் இருந்தபோதுதான் வட மாவட்டங்களை பல காலமாக கலக்கி வந்த வட நாட்டு பவாரியா கொலை மற்றும் கொள்ளைக் கும்பலை அடியோடு பிடித்து ஒடுக்கினார். உ.பிக்குச் சென்று அக்கும்பலைப் பிடித்ததோடு, அங்கேயே இரண்டு பேரை என்கெளன்டர் மூலம் தீர்த்துக் கட்டி சாதனை படைத்தார். இக்கும்பலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையைக் கலக்கி வந்த பங்க் குமார், வெள்ளை ரவி ஆகியோர் என்கெளன்டர் மூலம் காலி செய்யப்பட்டதும் ஜாங்கிட்டின் நேரடி நடவடிக்கையின் கீழ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆணையர் (புறநகர்) அலுவலகம், பரங்கிமலையில் அமையவுள்ளது. புறநகர்ப் பகுதிகளை இந்த ஆணையரகம் கவனித்துக் கொள்ளும். அதேசமயம், ஒட்டுமொத்த சென்னை பெருநகர காவல்துறையும், மாநகர காவல்துறை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.

மதுரை எஸ்.பி. மாற்றம்

இதற்கிடையே, மதுரை புறநகர் எஸ்.பி அன்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகர மத்திய போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்து வந்த மனோகர், மதுரை புறநகர் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+