மியான்மரில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்
பாங்காக்: நர்கீஸ் புயலால் சிதிலமடைந்துள்ள மியான்மருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வந்துள்ளார்.
மியான்மரைத் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு அங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாடே சுடுகாடாக மாறியுள்ளது. பல்வேறு உலக நாடுகள் மியான்மருக்கு உதவிக் கரம் நீட்டின. இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் உதவியை மியான்மர் ஏற்கவில்லை.
இந்த நிலையில், மியான்மருக்கு பான் கி மூன் வந்துள்ளார். யாங்கூன் விமான நிலையத்தில் அவரை மியான்மர் வெளியுறவு அமைச்சர் நியான் வின் வரவேற்றார். பின்னர் மியான்மர் வெளியுறவு அமைச்சகத்திற்கு பான் கி மூன் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் மியான்மர் புயலில் சிக்கி உயிரிழந்தோருக்காக அஞ்சலி செலுத்தி கையெழுத்திட்டார் மூன்.
பின்னர் யாங்கூனில் உள்ள புகழ் பெற்ற புத்த தலமான ஸ்வெடகான் பகோடா கோவிலுக்குச் சென்றார் பான் கி மூன். அங்கு அவர் மியான்மர் மக்களுக்காக வழிபாடு நடத்தினார்.
பின்னர் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவிலுக்கு நிதி அளித்தார் மூன்.
மியான்மர் பிரதமர் ஜெனரல் தெய்ன் செய்னை இன்று பான் கி மூன் சந்திக்கவுள்ளார்.
ராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மியான்மருக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு ஐ.நா. பொதுச் செயலாளர் ஒருவர் வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். முந்தைய ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான், தனது சார்பில் முன்பு பிரதிநிதி ஒருவரை அனுப்பியிருந்தார். மியான்மர் ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சென் சூகியை விடுவிப்பது தொடர்பாக அவர் ராணுவ ஆட்சியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications