4 ஆண்டு கால ஐ.மு.கூட்டணி ஆட்சி: சோனியா திருப்தி
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்து நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி பிரதமர் இல்லத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
இதில், மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்.பி. கனிமொழி, பாமக மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், ஆர்.வேலு, புதுச்சேரி பாமக எம்.பி. ராமதாஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இடதுசாரி தலைவர்கள் சீதாராம் எச்சூரி, ஏ.பி.பர்தான் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை இணைத்து மூன்றாவது அணியை ஆரம்பித்துள்ள சமாஜ்வாடி கட்சியின், பொதுச் செயலாளர் அமர்சிங்கும் கூட்டத்தில் காணப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்து விட்டது.
கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், பிரதமரின் தலைமைத்துவத்தை வெகுவாகப் பாராட்டினார். சோனியா கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் தனது செயல்பாடுகள் மூலமே அதிகம் பேசுவார். அவரது தலைமைப் பண்பைப் புரிந்து கொள்ள காலம் பிடிக்கும். ஆனால் அவரது திறமை எவ்ளவு அபாரமானது என்பதை காலம் நிரூபிக்கும். இது கடந்த காலங்களில் நான் கண்ட அனுபவம்.
கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றி விட்டது. திருப்தி தரும் வகையில் ஆட்சி நடந்து வருகிறது. இது அரசின் கடைசி ஆண்டு. இந்த ஆண்டில், இதுவரை நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கூட்டாக பாடுபட்டு, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றார் சோனியா.
நிகழ்ச்சியில் நான்கு ஆண்டு சாதனைகளைத் தொகுத்து மலர் வெளியிடப்பட்டது.