ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் தேர்தல் - இலங்கைக்கு தோல்வி
கொழும்பு: ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் இலங்கைக்குத் தோல்வி கிடைத்துள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை ஆதரித்தும் கூட அதற்குத் தோல்வியே கிடைத்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் நான்கு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் இலங்கை, ஜப்பான், தென் கொரியா, பஹ்ரைன், பாகிஸ்தான், கிழக்கு திமூர் ஆகியவை போட்டியிட்டன.
ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், இலங்கையும், கிழக்கு திமூரும் தோல்வி அடைந்தன. மற்ற நான்கு நாடுகளும் வெற்றி பெற்று உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டன.
இதில் இலங்கையின் தோல்வி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்ற போதிலும், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே ஓட்டுப் போட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
அதேபோல மீண்டும் அமைதித் தூதுவராக வர வேண்டும் என விருப்பம் கொண்டுள்ள நார்வே நாடும், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் என கருதப்படுகிறது. இதுதவிர மேலும் பல ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் எனவும் கருதப்படுகிறது. அப்படி இருந்தும் இலங்கை தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் 50க்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இலங்கைக்கு ஆதரவாக இல்லை என்பதே, இலங்கையின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அந்த நாடுகள் பாகிஸதானுக்கும், பஹ்ரைனுக்கும் ஆதரவாக திரும்பி விட்டன.
அதேபோல, இலங்கையில் நிலவி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை கொண்டுள்ள நாடுகளும் கூட இலங்கைக்கு எதிராக திரும்பியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இலங்கை தோல்வியடைந்துள்ள அதே நேரத்தில், மனித உரிமை மீறலில் மோசமானதாக பட்டியலிடப்பட்ட பஹ்ரைன் வெற்றி பெற்றிருப்பதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications