பயணிகள் கூட்டத்தில் வேன் பாய்ந்தது - 4 பேர் பலி
மதுரை: மதுரை அருகே உள்ள திருப்புவனத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் வேன் புகுந்து மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், வடகரையிலிருந்து ஒரு மாருதி ஆம்னி வேன், திருப்புவம் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருப்புவனம் ஆற்றுப் பாலத்தில் வேன் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
இதைப் பார்த்து சாலையில் சென்றவர்கள் பீதியடைந்து சிதறி ஓடினர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் வேன் புகுந்து மோதி நின்றது. இதில், மதுரை அய்யம்மாள் (35), குஞ்சரம் (40), திருமணபதி பூவலிங்கம் (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்புவனத்தைச் ேசர்ந்த பாண்டி (50) என்பவர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தப்பி ஓடிய வேன் டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.