பெட்ரோல் விலை உயர்வு 2 வாரம் ஒத்திவைப்பு
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு குறைந்தது 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை உயர்த்துவதற்காக பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 முதல் 5 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 135 டாலர் என்ற அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் குறைந்த விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து பெட்ரோல் நிறுவனங்களைக் காக்க கடுமையான அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என அந்த நிறுவனங்கள் பெட்ரோலியத்துறைக்குக் கோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக நேற்று காலை எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் பெட்ரோலியத் துறைச் செயலாளர் சீனிவாசன் ஆலோசனை நடத்தினார். இதன் இறுதியில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்த மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நேற்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
விலை உயர்வுக்கு சிதம்பரம் எதிர்ப்பு:
இதற்கு நிதியமைச்சகம் தெரிவித்த கவலையே காரணம் எனக் கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தினால் அதனால் பணவீக்கம் பெருமளவில் உயரும் அபாயம் இருப்பதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்தார்.
மேலும், கச்சா எண்ணெயின் விலை குறையக் கூடும். எனவே அதுவரை பொறுத்திருந்து பார்த்து விட்டு எந்த முடிவையும் எடுக்கலாம் எனவும் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறினார்.
ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் எண்ணெய் நிறுவனங்கள் பேராபத்தை சந்திக்க நேரிடும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கவலை தெரிவித்தார். விலை உயர்வு உடனடி அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
விலையை உயர்த்த முடியாவிட்டால் பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை குறைக்க வேண்டும், இதன் மூலம் நிறுவனங்களின் நஷ்டத்தை குறைக்கலாம் என தியோரா கூறினார். ஆனால், வரியைக் குறைக்க ப.சிதம்பரம் மறுத்துவிட்டார்.
பெட்ரோலியத் துறை மற்றும் நிதித்துறை இடையே விலை உயர்வு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அதைக் களைய நிதித்துறை மற்றும் பெட்ரோலியத் துறை ஆகியவற்றுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்துமாறு தனது முதன்மைச் செயலாளரை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் அவர் நடத்திய கூட்டத்திலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை குறைந்தது 15 நாட்களுக்குத் தள்ளிப் போட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதற்குள் கச்சா எண்ணெயின் விலை குறையலாம் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கமிஷனுக்காக விலை உயர்வு:
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை உயர்த்திக் கொடுப்பதற்காக லிட்டருக்கு 3 முதல் 5 பைசா வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 28 ஆக இருக்கும். டீசல் லிட்டருக்கு ரூ. 31 ஆகும்.
இதன் மூலம் நேற்று முதல் பெட்ரோல், டீசல் விலை சில பைசாக்கள் மட்டுமே உயர்ந்துள்ளது.