இலங்கை திரும்ப கருணா விருப்பம்-பிரிட்டன் பரிசீலனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பகுதியின் தளபதியாக இருந்தவர் கர்ணா. ஆனால் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து 2004ம் ஆண்டு புதிய பிரிவை உருவாக்கினார். அவரது பிரிவுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று பெயரிடப்பட்டது.
புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து புதுப் பிரிவை உருவாக்கிய கருணா, அரசுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார். அரசுப் படையினருடன் இணைந்து கொண்டு கருணா குழுவினர் செயல்பட்டதால் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி திடீரென லண்டனில் கைது செய்யப்பட்டார் கருணா. போலி பாஸ்போர்ட் மூலம் அவர் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு கடந்த ஜனவரி மாதம் 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் மே 9ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது குடியேற்றப் பிரிவு முகாமில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்த காலத்தில் கருணா, இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, இலங்கைக்கே தன்னைத் திருப்பி அனுப்புமாறு விண்ணப்பித்துள்ளாராம் கருணா.
ஆனால் முன்பு இருந்ததைப் போல தற்போது கருணாவுக்கு சாதகமான நிலை இலங்கையில் இல்லை என்று கூறப்படுகிறது. அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு முழுக்க முழுக்க பிள்ளையான் வசம் போய் விட்டது. அவர் தற்போது கிழக்கு மாகாண முதல்ராகவும் ஆகி விட்டார்.
பிள்ளையான் குழுவினர், முற்றிலும் கருணாவுக்கு எதிராக உள்ளனர். அரசும், பிள்ளையான் குழுவுக்கு ஆதரவாக உள்ளது. எனவே முன்பு போல கருணாவால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கருணாவின் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications