பாஜக வெற்றி-ஓகேனேக்கல் திட்டம் என்னாகும்?
சென்னை: கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதால், ஓகேனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அது எந்த வகையில் முட்டுக்கட்டை போடப் போகிறதோ என்ற கவலை எழுந்துள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரைத் தருவற்காக கொண்டு வரப்பட்டதுதான் ஓகேனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
முற்றிலும் தமிழக எல்லைக்குள் மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் கர்நாடக பாஜக முதல்வர் வேட்பாளர் எதிடியூரப்பா தான்.
தேர்தலை மனதில் வைத்து அவர் தான் இந்தப் பிரச்சனையை ஊதி பெரிதாக்கினார். இதையடுத்து கன்னட அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு போராட்டத்தில் குதித்தன. இது விஸ்வரூபம் எடுத்து இரு மாநிலங்களுக்கும் இடையிலான மோதலாக மாறியது.
ஓகேனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என எதியூரப்பா கூறியதால் அந்தத் திட்டம் தொடர்பாக போராட்டங்கள் வெடித்தன. கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்த் திரைப்படங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில், தற்போது கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அங்கு அமையும் அரசுடன் சுமூகமான முறையில் பேச்சு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் ஓகேனக்கல் திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந் நிலையில் ஓகேனேக்கல் திட்டத்திற்கு என்ன மாதிரியான சிக்கல் ஏற்படப் போகிறது, திட்டத்தை சுமூகமாக நிறைவேற்ற கர்நாடகத்தில் அமையவுள்ள புதிய அரசு ஒத்துழைக்குமா என்ற கவலை தமிழகத்தில் எழுந்துள்ளது.
அதேசமயம், ஓகேனேக்கல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற, கர்நாடகத்தின் ஒத்துழைப்பை வாங்கித் தர வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழக பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.