அக்னி நட்சத்திர வெயில் முடிந்தது - வெயிலின் தாக்கம் குறையும்
சென்னை: கடந்த 24 நாட்களாக வாட்டி, வதைத்து வந்த கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்தது. இதையடுத்து இனி வெயிலின் உக்கிரம் படிப்படியாக குறையும்.
கடந்த 3ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. தொடங்கியது முதலே வெயில் மிகக் கடுமையாக இருந்தது. குறிப்பாக சென்னை, அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப நிலை மிகக் கடுமையாக இருந்தது. சென்னை நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக வெயில் அடித்தது.
அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளே சென்னை நகரில் 105 டிகிரி வெயில் அடித்து மக்களை பயமுறுத்தியது. அதன் பின்னர் தினசரி வெயிலின் அளவு 102 டிகிரிக்கு மேல்தான் இருந்தது. குறிப்பாக 12ம் தேதி 21ம் தேதி வரை தினசரி வெயிலின் சராசரி அளவு 107 டிகிரியாக இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள்.
இருப்பினும் 22ம் தேதிக்குப் பின்னர் வெயிலின் அளவு சற்று தணிந்தது. மாலை நேரங்களில் சூறைக் காற்றும், ஓரளவு மழையும் பெய்து வெயிலின் வேகத்தை மட்டுப்படுத்தியது. கடந்த சில நாட்களாக 102 டிகிரி அளவுக்கு வெயில் அடித்து வருகிறது.
இப்படியாக வாட்டி வந்த கத்திரி வெயில் நேற்றுடன் விடைபெற்றது. இனிமேல் வெயிலின் உக்கிரம் குறையும், அனல் காற்று குறையும், லேசான மழைக்கும், நல்ல காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. ஓசூரில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மழை விளாசித் தள்ளியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சூறைக்காற்றுடன் நல்ல மழை பெய்தது.
தென் மேற்குப் பருவ மழை:
இதற்கிடையே, தென் மேற்குப் பருவ மழை இன்னும் ஓரிரு நாள் முழு அளவில் தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவையொட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இதனால் நல்ல மழை கிடைக்கும். இந்த ஆண்டு சராசரி அளவையொட்டியே மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குற்றால சீசன் தொடங்குகிறது:
ஆண்டுதோறும் குற்றாலத்தில் மே இறுதி முதல் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். இந்த ஆண்டும் சீசன் தொடங்குவதற்கான அறிகுறி கடந்த வாரம் முதலே தென்பட தொடங்கியது.
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் தமிழக-கேரள எல்லை பகுதியிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான சாரல் மழை பரவலாக பெய்ய தொடங்கியது. வெயிலின் தாக்கம் மிகவும் குறைந்து தென்றல் காற்று வீசி வருகிறது.
இன்னும் ஒரிரு தினங்களில் குற்றால சீசன் முழு்மையடையும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications