கோவில் கலசத்தை திருடியவர் கீழே விழுந்து படுகாயம்
காஞ்சிபும்: காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல தன்வனேஸ்வர் கோவில் கும்ப கலசத்தைத் திருட முயன்ற நபர், கால் தடுமாறி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. படுகாயமடைந்த நிலையில் கிடந்த அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளக்கரை எதிரே உள்ளது புகழ் பெற்ற தன்வனேஸ்வர் கோவில். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கோவில் நடையை மூடி விட்டு அர்ச்சகர் போய் விட்டார்.
இந்த நிலையில் இரவில் கோவிலுக்குள் வேலூரைச் சேர்ந்த பாபு (35) என்பவர் நுழைந்துள்ளார். கோவில் கோபுரத்தின் மீது உள்ள 3 அடி உயரமுடைய கும்ப கலசத்தைத் திருட முயன்றார். அப்போது அதை எடுக்க முடியாமல் கால் தடுமாறி கீழே விழுந்தார்.
கோபுரத்தின் மீதிருந்து விழுந்ததால் அவரது கால் உடைந்து, எலும்பு முறிந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் உதவி கேட்டு குரல் எழுப்பிப் பார்த்தார். ஆனால் யாருக்கும் அது கேட்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை கோவிலைத் திறந்த அர்ச்சகர், திருடன் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார் விரைந்து வந்து பாபுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார் பாபு.












Click it and Unblock the Notifications