பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்கிறது?
பெட்ரோல், டீசல் விலை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 16ம், டீசல் விலையை ரூ. 10ம் உயர்த்த வேண்டும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
முன்னதாக பெட்ரோல் விலையை உயர்த்தாமலேயே சிக்கலை தீர்க்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை நிதியமைச்சகம் ரத்து செய்தால் விலையை ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை என பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
இதை நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏற்க மறுத்து வந்தார். ஆனால், இது குறித்து யோசிக்குமாறு சோனியாவும் பிரதமரும் அவருக்கு அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வரியை முழுமையாக ரத்து செய்யாமல் அதை ஓரளவுக்குக் குறைப்பது, அதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட விலையை கொஞ்சம் உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2ம் உயரலாம் எனத் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 135 டாலராக உயர்ந்து விட்ட நிலையில் விலையை உயர்த்தாமல் விற்று வரும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.580 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனங்கள் ரூ.2.25 லட்சம் கோடியை இழந்துவிட்டன.
கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதற்கு இன்னும் 2 மாதங்களுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்களிடம் பணம் உள்ளது. இதனால் தினசரி செலவுகளை சமாளிக்கவே பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றன.
மாதந்தோறும் இவை வங்கிகளிடம் ரூ.3,500 கோடி கடன் வாங்கி வருகின்றன. இந்த கடன் ரூ.65,000 கோடியாக உயர்ந்து விட்டது.
இதனால் வங்கிகளும் கடன் தர மறுத்து வருகின்றன.
இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.16ம், டீசல் விலையை ரூ.10ம், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.50ம் உயர்த்துமாறு மத்திய அரசிடம் அவை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தன்னிச்சையாக உயர்ந்த பெட்ரோல் விலை:
இதற்கிடையே ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் பல பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.51க்கு விற்கப்பட்ட பெட்ரோல் ரூ.1.50 உயர்த்தப்பட்டு ரூ.52.50க்கு விற்கப்படுகிறது.