பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலட்சுமி மரணம்
சென்னை: 300 படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகை டி.பி.முத்துலட்சுமி மரணமடைந்தார். அவருக்கு வயது 77.
பொன்முடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் முத்துலட்சுமி. நாடோடி மன்னன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், இருவர் உள்ளம், நவராத்திரி, அன்பே வா உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
எம்.ஆர்.ராதா, தங்கவேலு, சந்திரபாபு, கருணாநிதி, டி.எஸ்.பாலையா உள்பட பல நகைச்சுவை நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர் மிழக அரசின் கலைமாமணி' விருதும் பெற்றவர்.
சில காலமாக நோய்வாய்பட்டிருந்த இவர் நேற்று மாலை மரணமடைந்தார்.
முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடியாகும். இவரது கணவர் முத்துராமலிங்கம். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
ஜெயலலிதா இரங்கல்:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலட்சுமி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆறறொணாத் துயரமும் அடைந்தேன்.
தனது இயல்பான நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகப் பெருமக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். என்னுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்தவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
முத்துலட்சுமியின் இழப்பு தனிப்பட்ட முறையில் மட்டும் அல்லாமல், திரைப்படத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.