செளந்தரபாண்டினார் தெருவாகுமா 'பாண்டி பஜார்'?
சென்னை: பாண்டி பஜார் தெருவுக்கு செளந்தர பாண்டினார் தெரு என்று பெயர் சூட்ட வேண்டும் என முதல்வருக்கு குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாண்டி பஜார் காவல் நிலையப் பெயர் செளந்தரபாண்டினார் அங்காடி காவல் நிலையம் என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன் சட்டமன்றத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது பாண்டி பஜார் என்பதை செளந்தரபாண்டினார் தெரு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் செளந்தரபாண்டினார் சதுக்கத்தில் அவருடைய சிலையை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன்.
ஆவன செய்யப்படும் என்று உறுதி அளித்தார். சிலை தந்தார். காவல் நிலையத்திற்கும் செளந்தரபாண்டினார் பெயர் வந்து விட்டது.
மக்களின் நாவில் புழக்கத்தில் வரும் அளவிற்கு செளந்தர பாண்டினார் தெரு என்றும் வந்துவிட ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை பணிவோடு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் குமரி அனந்தன்.