தீயில் எரிந்த விடைத்தாள்கள்-அனைவரும் பாஸ்
சென்னை: வேலூரில் தீயில் எரிந்து விடைத் தாள்கள் நாசமான 566 மாணவ- மாணவிகளும் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை வெளியிட்ட அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவனாந்தம் நிருபர்களிடம் கூறுகையில்,
வேலூர் ஊரீஸ் மேல் நிலைப் பள்ளியில் கடந்த 24.4.08 அன்று திருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த விடைத் தாள்கள் தீ விபத்தில் சேதம் அடைந்தன. 23,976 விடைத்தாள்கள் அந்த அறையில் இருந்தன. இதில் 12,832 விடைத் தாள்கள் பாதிக்கப்பட்டன.
சேதமடைந்த விடைத்தாள்கள் அனைத்தும் ஆங்கிலம் 2ம் தாள்களாகும்.
இதில் 12,266 விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யும் அளவிற்கு இருந்தன. அதனால் அவற்றை திருத்தி மதிப்பெண் வழங்கப்பட்டது.
தீயில் முழுமையாக எரிந்தும், தீயை அணைக்கும் போது தண்ணீர் பீச்சி அடித்ததில் அழிந்து போன 480 விடைத் தாள்களும், 86 பிரைவேட் விடைத் தாள்களும் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு நாசமாயின.
இந்த 566 விடைத் தாள்களின் மாணவர்கள் மற்ற பாடங்களில் எடுத்த மார்க் மற்றும் ஆங்கிலம் முதல் தாளில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
ஆங்கில முதல் தாளில் பெற்ற மதிப்பெண் அல்லது மற்ற 4 பாடங்களில் எடுத்த மதிப்பெண் இவற்றில் எது அதிகமோ அந்த மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட 566 விடைத் தாள்களுக்கும் மதிப்பெண் அளிக்கப்பட்டது. இதில் அந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார் வசந்தி.
பள்ளி கல்வித் துறை இயக்குனராக பெருமாள்சாமி:
இதற்கிடையே தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குனராக உள்ள ஜெகன்நாதன் நாளை (31ம் தேதி) ஓய்வு பெறுகிறார்.
அவருக்கு பதிலாக டாக்டர் பெருமாள்சாமி புதிய பள்ளி கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டள்ளார்.
பெருமாள் சாமி தற்போது ஆசிரியர்-ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இனி கூடுதலாக இந்த பொறுப்பை கவனிப்பார் என்று அரசு அறிவித்துள்ளது.