அதிமுக பாசறை விழாவில்அடிதடி-கலைராஜன் மீது வழக்கு
சென்னை: சென்னையில் நடந்த அதிமுக இளைஞர் பாசறைத் தொடக்க விழாவில் பெரும் அடிதடி ஏற்பட்டது. இதுதொடர்பாக தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் உள்ளிட்ட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக சார்பில் இளம் பெண்கள் பாசறை, இளைஞர் பாசறைகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு வருகின்றன.
சென்னை ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை தொடங்கப்பட்டன.
91-வது வட்டம் லாயிட்ஸ் ரோடு, ரோட்டரி நகர் பகுதியில் நடந்த விழாவில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், தென்சென்னை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கலைராஜன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, 91-வது வட்ட முன்னாள் செயலாளர் சீனிவாசன், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் வாசன் ஆகியோர் தலைமையிலான கோஷ்டிகளுக்கு இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கற்களை வீசியும், சோடா பாட்டில்களால் தாக்கிக் கொண்டும் அடித்துக் கொண்டனர். இதில் ஒரு கார் சேதமடைந்தது.
15 பேர் காயமடைந்தனர். இவர்களில் சீனிவாசன் பலத்த காயத்துடன் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர்.
பின்னர் இரு தரப்பினரும் மாறி மாறி புகார்கள் கொடுத்தனர். அதன் பேரில் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் உள்ளிட்ட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் கோவிந்தராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அடிதடி நிர்வாகிகள் நீக்கம்- ஜெ அதிரடி:
இந் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால்
திருவல்லிக்கேணி பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செலாளர் ஜெ.ஏ. சிவசுப்பிரமணியன், 94வது வட்ட செயலாளர் எம்.துலுக்கானம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி முன்னாள் செயலாளர் ஜெ.சீனிவாசன், 91வது வட்ட பொருளாளர் ஆர்.எம். முருகன்,
மேலமைப்பு பிரதிநிதி எம்.ஜெ. கபாலி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கே. கோவிந்தராஜ், பி.மோகன் ஆகிய 7 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இவர்களுடன் அதிமுகவினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.