திருமண நாளில் பெண் மாயம்-காதலன் வீட்டில் மீட்பு!
சென்னை: கல்யாண நாளின்போது மணப்பெண் திடீரென மாயமானார். அவரை காதலர் வீட்டில் வைத்து போலீஸார் மீட்டு, அவரது பெற்றோரிடம் சேர்த்தனர்.
சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் சபீக் (வயது 48). இவர் ஒரு தொழிலதிபர். இவருடைய மகள் இர்பானா சசிதா (22).
இர்பானா, சில வருடங்களுக்கு முன்பு அண்ணா சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். அப்போது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சரவண பெருமாளுடன் இர்பானாவுக்கு காதல் மலர்ந்தது.
சரவண பெருமாள் பி.எஸ்சி. படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது காதல் விஷயம், இரு வீட்டினருக்கும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், இர்பானாவுக்கு அவரது அத்தை மகனை கல்யாணம் செய்து வைக்க தீர்மானித்தனர். இர்பானாவின அண்ணனுக்கும், அத்தை வீட்டிலேயே பெண்ணை முடிவு செய்தனர்.
இருவரது கல்யாணங்களையும் ஒரே நாளில் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை ராயபுரத்தில் கல்யாணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு இர்பானா வீட்டை விட்டு வெளியேறினார். மகளைக் காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர். பல இடங்களில் தேடிப் பார்த்தனர். பின்னர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் இர்பானாவை தேட ஆரம்பித்தனர். இறுதியில் அவரது காதலர் சரவணப்பெருமாளின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இர்பானா அங்கு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இவர்களின் காதலை ஏற்கவே முடியாது என்று சரவணப்பெருமாளின் தந்தை டெல்லி பாபு தெரிவித்தார். இந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக, பெற்றோர் சம்மதித்தால்தான் இர்பானாவை மணப்பேன் என்று கூறினார்.
ஆனால் இர்பானாவோ, தனது காதலரைத்தான் மணப்பேன் என்று கூறினார். இதனால் இர்பானாவுக்கு போலீஸார் அறிவுரை கூறி பெற்றோருடன் செல்லுமாறு கூறினர்.
ஆனால் பெற்றோர் பார்த்த மணமகனை கட்டிக் கொள்ள மாட்டேன் என்று இர்பானா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து அவரது கல்யாணம் நிறுத்தப்பட்டது. அவரது அண்ணனுக்கு மட்டும் கல்யாணம் நடந்தது.