குமரி வள்ளுவர் சிலைக்கு ரசாயானப் பூச்சு-படகு சவாரி நிறுத்தம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயானப்பூச்சு பூசப்படவுள்ளது. இதையடுத்து நான்கரை மாதங்களுக்கு வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு அருகே உள்ள பாறையில், 133 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை கடந்த திமுக ஆட்சியில் நிறுவப்பட்டது.
திருவள்ளுவர் சிலை கடல் காற்று உப்பினால் சேதம் அடைந்து வருகிறது. உப்பு காற்றினால் சிலையின் கை- கால் பகுதியில் உள்ள பாறைத் கற்கள் உதிர ஆரம்பித்துள்ளது. இது தொடர்ந்தால் சிலைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே உப்பு காற்றில் இருந்து சிலையை பாதுகாக்க, அதில் ரசாயன கலவையைப் பூச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசப்பட இருப்பதால், சிலையின் தலைப்பகுதி வரை இரும்பு கம்பிகளால் சாரம் கட்டப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், சிலை பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டியும், ரசாயன கலவை பூச்சு வேலை நிறைவடையும் வரை திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடை 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 16.10.2008 வரை நான்கரை மாதங்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும். வருகிற அக்டோபர் மாதம் 16-ந் தேதிக்கு பிறகே வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி தொடங்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications