சிபிஐ அதிகாரிக்கு லஞ்சம்-அஸ்ஸாம் அமைச்சர் கைது
டெல்லி: கொலை வழக்கிலிருந்து தப்ப சிபிஐ அதிகாரிக்கு லஞ்சம் தந்த அஸ்ஸாம் கல்வியமைச்சர் ரிபுன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் நீக்கியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் முதல்வர் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் ரிபுன் போராக்.
இவர் கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து, மலைவாழ் இன மாணவர் தலைவர் தொப்பா போட்டியிட்டார்.
அப்போது ஏற்பட்ட தேர்தல் விரோதத்தில், தொப்பா கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரிபுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்கவும் வழக்கை மூடி மறைக்கவும் விசாரணையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிக்கு ரூ.10 லட்சம் தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ரிபுன்.
இதை தனது மேல் அதிகாரிகளுக்கு சிபிஐ அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடிக்க சிபிஐ முடிவு செய்தது.
அவரை டெல்லியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்து பணத்தை வாங்குமாறு அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவரை டெல்லிக்கு வரவழைத்தார் சிபிஐ அதிகாரி.
தெற்கு டெல்லியில் மதுரா ரோட்டில் உள்ள கெஸ்ட் ஹவுசில் வைத்து ரூ. 10 லட்சத்தை சிபிஐ அதிகாரியிடம் தந்தார் அமைச்சர் ரிபுன் போராக். இதையடுத்து அங்கிருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அவரை கைது செய்தது. அவரது இரு உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
பதவி நீக்கம்:
இதையடுத்து அமைச்சர் ரிபுனை உடனடியாக பதவி நீக்கம் செய்து முதல்வர் தருண் கோகோய் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications