வறுமையால் மேற்படிப்புக்கு ஏங்கும் பார்வையற்ற மாணவர்
சாத்தான்குளம்: பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும், படிக்க வசதி இல்லாததால் மேல் படிப்பு படிக்க முடியாமல் தவித்து வருகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஆனந்த்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் பெரிய இசக்கி. இவரது மகன் பி.ஆனந்த். ஆனந்துக்கு 5 வயது இருக்கும்போது அவருக்கு திடீரென்று கண்பார்வை பறிபோனது.
பார்வையற்ற நிலையிலும் அவர் ஆர்வமாக பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார். தற்போது பிளஸ்டூ முடித்துள்ள ஆனந்த் 1047 மார்க் பெற்று பார்வையற்ற மாணவர்களில் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
முன்பு 10ம் வகுப்பு தேர்வில் இவர் 447 மார்க் எடுத்து சாதனை படைத்தார். ஆனந்தின் சாதனை பிறரை வியக்க வைத்துள்ளது. ஆனந்தின் கல்வி சாதனையின் பின்னே அவரது வறுமையும், ஏழ்மையும் பளிச்சிடுகிறது.
தந்தை பெரிய இசக்கி சென்னையில் பீங்கான் கடையில் வேலை செய்து வருகிறார். அண்ணன் மாடசாமி சென்னையில் வேன் டிரைவராக உள்ளார். இவர்களால் ஆனந்தின் படிப்புக்கு போதிய அளவு உதவ முடியவில்லை. ஏழ்மையிலும் சாதித்த ஆனந்த், சர்க்கரை வியாதி காரணமாக அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நிலையில் உள்ளான்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக ஆசைப்படும் ஆனந்தின் மேற்படிப்பு கனவாக உள்ளது. கல்வி கற்க அதிக ஆர்வம் இருந்தும் குடும்ப சூழ்நிலை ஆனந்தை கலங்க செய்துள்ளது.
குடும்ப பொருளாதாரம் கை கொடுக்காத நிலையில் ஆசிரியர் பயிற்சியாவது படிக்க வேண்டும் என்ற ஆவல் ஆனந்திற்கு உள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், சிறுவயதிலேயே பார்வையை இழந்தாலும் தொடர்ந்து படித்து வருகிறேன். பிளஸ்டு முடித்துள்ள எனக்கு மேற்படிப்பு படிக்க பொருளாதார நிலை கஷ்டமாக உள்ளது. மாநில அரசு இதற்கு உதவ வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications