ஓகேனக்கல்: தமிழகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு விளக்கம்
டெல்லி: பெங்களூர் குடிநீர்த் திட்டத்திற்கு எப்படி ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியதோ, அதேபோலத்தான் 1998ம் ஆண்டு ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கும் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜனார்த்தன பூஜாரிக்கு ஜோஸ் எழுதியுள்ள கடிதத்தில், இரு மாநிலங்களுக்கும் இடையிலான பங்கு நீர் போக, காவிரியில் மீதமுள்ள நீரை பெங்களூர் நகருக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கர்நாடக அரசு கோரியது.
பெங்களூர் குடிநீர்த் திட்டத்தின் அவசரத்தைக் கருதி 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஆட்சேபனை இல்லை சான்றிதழை வழங்கியது.
அதன் பின்னர், பெங்களூர் திட்டத்தைப் போலவே, காவிரியில் 1.4 டிஎம்சி தண்ணீரை ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தர வேண்டும் என தமிழக அரசு மத்திய நீர்வளத்துறையை அணுகியது.
இதையடுத்து 1998ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி இரு மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் கூட்டத்தை மத்திய நீர்வளத்துறை கூட்டியது.
இக்கூட்டத்தில் கர்நாடக மாநில தலைமைச் செயலாளரும் கலந்துகொண்டார்.
இரு மாநிலங்களும், தத்தமது குடிநீர்த் திட்டம் தொடர்பாக அடுத்தவருக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் பெங்களூர் குடிநீர்த் திட்டத்திற்கு எப்படி ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்கப்பட்டதோ, அதேபோல, 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கும் ஆட்சேபனை இல்லை சான்றிதழை மத்திய நீர்வளத்துறை வழங்கியது என்று கூறியுள்ளார் ஜோஸ்.
ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களிலும் கொந்தளிப்பு நிலவிய நேரத்தில் இந்த விவரத்தை வெளியிடாத மத்திய அரசு, இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் தோற்றுப் போய், பாஜக அரசு வந்துள்ள நேரத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications