அரசு உத்தரவுக்கு புறம்பாக கூடுதல் கட்டணம்: பள்ளி மீது புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு உத்தரவை மீறி, ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்று அதிக அளவில் கட்டணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வசூலிக்கப்படும் சிறப்புக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம், ஒலி-ஒளிக் கல்விக் கட்டணம் ஆகியவற்றை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அரசாணைக்குப் புறம்பாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட எம்.விமலன் என்கிற 'தட்ஸ்தமிழ்' வாசகர் நமக்கு இ-மெயில் மூலம் வேதனை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் அவர் தனது சொந்த செலவில் ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

நான் ஸ்பான்சர் செய்து வரும் ஒரு மாணவரை, முத்துப்பேட்டை, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 6வது வகுப்பில் சேர்ப்பதற்காக அணுகினேன்.

மே 26ம் தேதி ரூ. 30 கட்டணம் செலுத்தி விண்ணப்ப பாரத்தை வாங்கினேன். பள்ளிக் கட்டணம் எவ்வளவு என்று நான் விசாரித்தபோது, ரூ. 600 கட்டணமாக செலுத்துமாறும், அதை பள்ளி கணக்காளர் பிரிவில் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மீடியம் பிரிவில் 6வது வகுப்பு மாணவருக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட இது அதிகமாகும்.

அரசு விதிமுறைகளை சுட்டிக்காட்டி நான் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சகோதரர் ஞானபிரகாசம் என்பவரைப் போய் பார்க்குமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில், தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அவரிடம் நான் பள்ளிக் கட்டணம் அதிகமாக இருப்பது குறித்து கேட்டபோது, உத்தரவின்படியே பள்ளிக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார்.

சரி, அந்தத் தொகையை செலுத்துகிறேன். ஆனால் அதற்குரிய ரசீதை கொடுப்பீர்களா என்று நான் அவரிடம் கேட்டபோது, இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் மட்டுமே விளக்கம் பெற முடியும் என்றார்.

மேலும் பள்ளிக் கட்டணம் தொடர்பான எந்தக் கேள்வியையும், சந்தேகத்தையும் தலைமை ஆசிரியரிடமே கேட்டுக் கொள்ளுமாறும் கூறிவிட்டார்.

ஆனால் எனது சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டிய தலைமை ஆசிரியர் அப்போது ஊரில் இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அதிகாரியிடம் நான் புகார் அளிக்கப் போவதாக சகோதரர் ஞானபிரகாசத்திடம் தெரிவித்தேன். அதற்கு அவர், எதுவாக இருந்தாலும் தலைமை ஆசிரியரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றார்.

ஆனால், தலைமை ஆசிரியர் எப்போது பள்ளிக்கு வருவார் என்ற தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதையடுத்து மே 27ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட கல்வி அதிகாரியிடம் நான் முறைப்படி புகார் அளித்தேன். பின்னர் எனது புகார் மீதான நடவடிக்கை குறித்து நான் கல்வி அதிகாரியின் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். என்று கூறியுள்ளார் விமலன்.

இந்தப் பள்ளி மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு உத்தரவுக்குப் புறம்பாக கூடுதலான கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர்.

கல்வித்துறையில் பல்வேறு அதிவேக, பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கவனிப்பாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+