'சைக்கோ' என நினைத்து வாலிபரை எரித்துக் கொன்ற மக்கள்
விழுப்புரம்: சைக்கோ மனிதன் என்ற சந்தேகத்தில் வாலிபர் ஒருவரை கிராம மக்கள் உயிரோடு வைத்துக் கொன்ற பயங்கரம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் சைக்கோ மனிதர் ஒருவரால் பெரும் பதட்டமும், பரபரப்பும்ஏற்பட்டது. இந்த மனிதனின் தாக்குதலுக்கு 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர்தான் சைக்கோ மனிதன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர், குச்சிப்பாளையம் உள்ளிட்ட சில கிராமங்களிலும் சைக்கோ மனிதன் நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இதனால் இரவில் தூங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிைலயில் நேற்று மதியம் 2மணியளவில் ஏழுசெம்பொன் என்ற கிராமத்தில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் கிராம மக்கள் யார் நீங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்று ெதரிகிறது.
இதனால் அவர்கள் சைக்கோ மனிதர்களாக இருக்கலாம் என மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அவர்களை சுற்றிச் சூழ்ந்தனர். அப்போது அந்த 3 பேரில் ஒருவர், தன்னிடம் இருந்த கத்தியால், பொதுமக்களை வெட்டப் பாய்ந்தார். இதில், முனுசாமி என்பவரின் கழுத்தில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து கிராம மக்கள் கோபமடைந்தனர். அவர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.
அவரை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் சுடுகாட்டுக்கு அவரை இழுத்துச் சென்றனர். அவரை தரையில் தள்ளி, மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தனர். இதில் அந்த நபர் அலறிக் கதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். அதற்குள் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர்.
எரித்துக் கொல்லப்பட்ட நபர் யார் என்று தெரியவில்லை. தலைமறைவாகி விட்ட இருவரையும் பிடித்தால்தான் இவர் யார் என்பது தெரிய வரும். திருட வந்த கும்பலாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மர்ம நபரை கிராம மக்கள் சைக்கோ மனிதன் என நினைத்து உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications