பெட்ரோல் விலை உயர்வு: கூட்டுப் போராட்டம்-டி.ஆர்
சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை எதிர்த்து தனித்தனியாக போராடாமல் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஒரு நாளைத் தேர்வு செய்து போராட்டம் நடத்த வேண்டும் என லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் தவறான கொள்கையால்தான் விலைவாசி உயர்வு மக்களை வதைத்து வருகிறது. தற்போது பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி மக்களை மேலும் வேதனையடையச் செய்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடத்தியுள்ளனர். பெரும்பாலான கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தாமல், தனித்தனியாக போராட்டம் நடத்தக்கூடாது. அனைவரும் சேர்ந்து ஒரு தினத்தை தேர்வு செய்து அன்றைய நாளில் போராட்டம் நடத்த வேண்டும்.
நாங்கள் வளர்ந்து வருகிறோம். எப்போதுமே நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் எனக் கூறியதில்லை. 234 தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறுவோம் என்று நான் எப்போதுமே சொன்னதில்லை.
விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளேன். பெரும் திரளான பொதுமக்கள் அதற்குக் கூடினர். விரைவில் விருதுநகர், உசிலம்பட்டி, திருவண்ணாமலை ஆகிய நகரங்களிலும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம் என்று கூறியுள்ளார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications