சென்னைக்கு 5 புதிய சட்டசபைத் தொகுதிகள்
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக 5 சட்டசபைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டு அவை அனைத்தும் சென்னை எம்.பி. தொகுதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
தொகுதி மறுசீரமைப்பின் படி தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளும் மறுசீரமைக்கப்பட்டன. சில தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன. சில தொகுதிகள் ரத்து செய்யப்பட்டு, அவற்றுக்குப் பதில் புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியேதான் உள்ளது.
இந்த வகையில்,சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 5 புதிய சட்டசபைத் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கொளத்தூர், விருகம்பாக்கம், திரு.வி.க.நகர் ஆகிய ஐந்து தொகுதிகளும் சென்னை எம்.பி.தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தென் சென்னை எம்.பி. தொகுதியில், விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் இடம் பெறும் மற்ற 3 தொகுதிகள்: சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர்.
வட சென்னை எம்.பி. தொகுதியில், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் இடம் பெறும் மற்ற நான்கு தொகுதிகள்: திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், ராயபுரம்.
மத்திய சென்னை தொகுதிகள்: வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர்.
இதுவரை தனித்தனியாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக மாற்றப்பட்டு விட்டது. அது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என்ற பெயரில் அழைக்கப்படும்.












Click it and Unblock the Notifications