கவுன்சிலிங்கில் ரகளை: டாக்டர்கள் மீது போலீஸார் சரமாரி தடியடி
சென்னை: சென்னையில் நடந்த மருத்துவ மேல் படிப்புக்கான கவுன்சிலிங்கின்போது பெரும் மோதல் மூண்டது. போலீஸார், டாக்டர்களை விரட்டி விரட்டி அடித்தனர். இதில் பெண்கள் உள்பட 20 பேர் படுகாயமடந்தனர்.
மருத்துவப் படிப்பை (எம்.பி.பி.எஸ்) முடித்த மாணவ, மாணவியர் முதுநிலைப் படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் நடந்தது.
நேற்று 2வது கட்ட கவுன்சிலிங் நடந்தது. 16 பிரிவுகளில் மேற்படிப்புக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இதில் ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருவோர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு வரை எம்.பி.பி.எஸ். படித்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தங்களையும் இந்த கவுன்சிலிங்கில் அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 21 பேர் வழக்கு தொடர்ந்தனர். அதை ஏற்ற உயர்நீதிமன்றம், அவர்களையும் கவுன்சிலிங்கில் அனுமதிக்க உத்தரவிட்டது.
இந்தச் சூழ்நிலையில், நேற்று மாலை கவுன்சிலிங் தொடங்கியது. அப்போது, 21 மாணவர்களை அனுமதிப்பதாக இருந்தால், அரசுப் பணியில்சேராத அனைத்து எம்.பி.பி.எஸ், மாணவர்களையும் கவுன்சிலிங்கில் அனுமதிக்க வேண்டும் என்று அரசுப் பணியில்இல்லாத டாக்டர்கள் கோரினர்.
இதை ஏற்க கவுன்சிலிங் செயலாளர் மோகனசுந்தரம் மறுத்து விட்டார். இதையடுத்து 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் சாலை மறியலில் இறங்கினர். உடனடியாக போலீஸார்வரவழைக்கப்பட்டனர். போலீஸார் மாணவ, மாணவியரை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர்.
ஆனால் மாணவ, மாணவியர் மறுத்து விட்டனர். இதையடுத்து போலீஸார் திடீரென தடியடியில் இறங்கினர். ஆண், பெண் என்று பாராமல் தாறுமாறாக அடித்து விரட்டினர். அதிலும் சப் இன்ஸ்பெக்டர் வசந்தி என்பவர், ஒரு மாணவியை துரத்தி துரத்தி அடித்தார். இதில் அந்தப் பெண்ணின் முதுகில் பலத்தகாயம் ஏற்பட்டு துடிதுடித்தார்.
இதைப் பார்த்த மாணவ, மாணவியர் மட்டுமல்லாது அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸாரின் இந்த தடியடியில் 13 பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். பின்னர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை பஸ்சில் ஏற்றி சற்று தூரம் சென்று இறக்கி விட்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு வந்து போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் மீண்டும் விரட்டியடித்தனர்.
இந்த களேபரம் காரணமாக அந்தசாலையில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
இந்தப் பிரச்சினைக்குப் பின்னர் கவுன்சிலிங் செயலாளர் மோகனசுந்தரத்தை சந்தித்து மாணவ, மாணவியர் முறையிட்டனர். பின்னர் மோகனசுந்தரம் பேசுகையில், நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கோர்ட் உத்தரவின்படிதான் 21 பேரை அனுமதிப்பதாக அறிவித்தோம். தற்போது உங்களது கோரிக்கையின்படி அனைவரையும் அனுமதிக்கிறோம் என்றார்.
இன்றுடன் கவுன்சிலிங் முடிவடைகிறது. இதையொட்டி மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications