வருகிறது 'வானிலை' தொலைக்காட்சி
புவனேஸ்வர்: லேட்டஸ்ட் வானிலை அறிக்கை, வானிலை முன்னறிவிப்பு, எச்சரிக்கையை வழங்கும் புதிய தொலைக்காட்சியை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தொடங்கவுள்ளது.
பல நாடுகளில் வானிக்காக தனி தொலைக்காட்சிகள், ரேடியோ சேவைகள் உள்ளன. ஆனால், நம் நாட்டில் இதுவரை வானிலைக்கென தனி டிவியோ, ரேடியோவோ இல்லை.
இந் நிலையில் தனியாருடன் இணைந்து புதிய டிவி சேனலை தொடங்க மத்திய அரசு நிறுவனமான இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ச்சி மையத்தின் டைரக்டர் ஜெனரல் அஜித் தியாகி கூறுகையில், வரும் டிசம்பர் முதல் மார்ச் மாதத்துக்குள் இந்த தொலைக்காட்சி தனது சேவையை ஆரம்பிக்கும். முதலில் நாளொன்றுக்கு 6 மணி நேரம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும்.
இந்திய வானிலை ஆராய்ச்சிப் பணிகள், கருவிகள் மேம்பாடு, வானிலைக்கான செயற்கைக் கோள்கள் ஏவுதல் ஆகிய பணிகளுக்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களில் தானியங்கி வானிலை ஆய்வு மையங்களும், மழை அளவிடும் கருவிகளும் அமைக்கப்படும்.
நாடு முழுவதும் 55 டாப்ளர் வானிலை ரேடார் நிலையங்கள் அமைக்கப்படும். கடலோரப் பகுதிகள் ரேடார்கள் கொண்ட வலையமைப்பால் ஒருங்கிணைக்கப்படும். இதன்மூலம் கடல் பகுதி மாற்றங்கள் உடனுக்குடன் அறியப்படும்.
தகவல் தொடர்பு தவிர வானிலை ஆய்வுக்கும் உதவும் செயற்கைக் கோளான இன்சாட்-3டி இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும்.
நாடு முழுவதும் உள்ள வேளாண் கல்லூரிகளை வானிலை ஆய்வு மையங்களுடன் ஒருங்கிணைத்து வலையமைப்பு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் வானிலை குறித்த தகவல்கள் உடனுக்குடன் வேளாண் அமைப்புகள் மூலம் விவசாயிகளுக்கு அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications