முத்தரப்பு தொடர்: பாக்.கை வீழ்த்திய இந்தியா
டாக்கா: வங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு தொடரில், தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சுருட்டி அபார வெற்றியைப் பெற்றது இந்தியா.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடர் டாக்காவில் தொடங்கியுள்ளது.
இதில் நேற்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. முதலில் ஆடிய இந்தியாவுக்கு ஷேவாக்கும், கம்பீரும் அபார தொடக்கத்ைத கொடுத்தனர். ஷேவாக் அதிரடியாக ஆடி 76 பந்துகளில் 89 ரன்களைக்குவித்தார். இதில் அவர் விளாசிய 13 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடக்கம்.
மறு முனையில் 62 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தார் கம்பீர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 155 ரன்களைச் சேர்த்தனர்.
பின்னர் வந்த யுவராஜ்சிங் 54 ரன்களைச்சேர்த்தார். கேப்டன் டோணி 24 ரன்களும், ரெய்னா 26 ரன்களும்சேர்த்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களைக் குவித்தது இந்தியா.
பின்னர் ஆடிய பாகிஸ்தானுக்கு சல்மான் பட் 9 ரன்களில் வீழ்ந்து ஏமாற்றத்தை அளித்தார். அக்மல் 38 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்தவர்களில் சலீம் மாலிக் மட்டும் சிறப்பாக ஆடினார். அவர் 53 ரன்களைச் சேர்த்தார். அப்ரிதி 23 ரன்களும், மிஸ்பா உல் ஹக் 24ரன்களும்
சேர்த்தனர்.
பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமாரும், சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவும் தவிடுபொடியாக்கினர். இருவரும் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர். இஷாந்த் சர்மாவும், யுவராஜ்சிங்கும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இறுதியில் 35.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான். இதன் மூலம் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய பெருமையையும் இந்திய அணி பெற்றது.
ஆட்ட நாயகனாக வீரேந்திர ஷேவாக் தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications