விலைவாசி-முதல்வரிடம் கம்யூ. தலைவர்கள் முறையீடு
சென்னை: விலைவாசி உயர்வைத் தடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க மத்திய அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், எம்.பி. டி.கே.ரங்கராஜன், எம்.எல்.ஏ பாலபாரதி ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து இது தொடர்பாக விவாதித்தனர்.
அப்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து முதல்வருடன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேச்சு நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், மத்தியஅரசுடன் பேசி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும், அதற்கு மாற்று வழியைக் காணவும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என முதல்வரைக் கேட்டுக் கொண்டோம்.
விலைவாசி உயர்வு மற்றும் பிற விலை உயர்வைத் தவிர்க்க இடதுசாரிகள் கொடுத்த மாற்றுத்திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துமாறும் முதல்வரை கேட்டுக் கொண்டோம்.
இடதுசாரிகள் கொடுத்த திட்டத்தின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் விலைவாசி உயர்வு பெருமளவில் குறைந்திருக்கும். பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தையும் தவிர்த்திருக்கலாம்.
அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உடனடியாக குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் கோபத்திலிருந்து மத்திய அரசு தப்ப முடியாது என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications