லாரி வாடகை 20% உயர்வு-விலைகள் உயரும்!
சென்னை: டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் சரக்கு லாரிகளின் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சரக்குக்கட்டணத்தை உயர்த்துவோம் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சம்மேளனம் அறிவித்திருந்தது.
இதையடுத்து டெல்லியில் பத்து சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் 20 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம், சத்திரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா கல்யாண மண்டபத்தில் நடந்தது. இதில், தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளனம், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம், சேலம் மாவட்ட லாரி புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் ஆகியவை கலந்துகொண்டன.
இக்கூட்டத்தில் லாரி வாடகைக் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செங்கோடன் கூறுகையில், ஏற்கனவே நஷ்டத்தில்தான் தொழில் நடத்தி வருகிறோம். உதிரிபாகங்களுக்கான விலை உயர்வு, ஊழியர்களின் சம்பளம், டயர் விலை உயர்வு போன்றவற்றையும் உரிமையாளர்களே ஏற்க வேண்டி இருந்தது.
நிலைமையை எப்படி சமாளிப்பது என்று எண்ணுவதற்குள் மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தி விட்டது.
இன்றைய கூட்டத்தில், லாரி வாடகைக் கட்டணத்தை 20 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.. வியாழக்கிழமை முதல்கட்டணஉயர்வு அமலுக்கு வருகிறது.
தற்போது கிலோமீட்டருக்கு ரூ.14 கட்டணமாக வசூலிக்கிறோம். இது ரூ. 18 ஆக உயரும் என்றார் செங்கோடன்.
லாரி வாடகைக் கட்டணம் உயர்வு காரணமாக காய்கறி விலைதான் கடுமையாக உயரும் ஆபத்து உள்ளது. மேலும், பிற உணவுப் பண்டங்கள், ஜவுளிகள் உள்ளிட்டவற்றின் விலையும் கடுமையாக உயரக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.