கற்பழிப்பு வழக்கில் சிக்கிய பாதிரியாருக்கு டிஎன்ஏ சோதனை
சென்னை: பாதிரியார் கற்பழித்ததால் குழந்தை பிறந்ததாக மாணவி கொடுத்த புகாரின் பேரில், அந்தப் பாதிரியாருக்கு சென்னையில் மரபணுச் சோதனை நடத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள சாவடியூரை சேர்ந்தவர் மதலைமேரி ராணி. இவரது மகள் சுமித்ரா மேரி (16). 10ம் வகுப்பு படித்து வந்த மேரி, ஜனவரி 5-ந் தேதி தனது தாயாரோடு தர்மபுரி டி.எஸ்.பி. விஜயராகவனிடம் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.
அதில், பாதிரியார் அமலநாதன் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் தான் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுமித்ராமேரி குறிப்பிட்டிருந்தார். அந்த புகார் மனு தொடர்பாக தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பாதிரியார் அமலநாதன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 21-ந் தேதி அன்று கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சுமித்ரா மேரி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பாதிரியார் அமலநாதன் கோர்ட்டு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். மாணவி சுமித்ராமேரி, பாதிரியார் அமலநாதன் கற்பழித்ததால் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக குற்றம் சுமத்தினார்.
ஆனால் பாதிரியார் அமலநாதன், மாணவி சுமித்ரா மேரியை கற்பழிக்கவில்லை என்றும், அவருக்கு பிறந்த ஆண் குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என்றும் பிடிவாதமாக மறுத்தார்.
இதையடுத்து மரபணு சோதனை நடத்த போலீஸார் தீர்மானித்தனர். இதற்கு கோர்ட்டும் அனுமதி வழங்கியது. அதன்படி பாதிரியார் அமலநாதனை மரபணு சோதனைக்காக போலீசார் நேற்று காலை சென்னை அழைத்து வந்தனர்.
இதேபோல, மாணவி சுமித்ராமேரி, குழந்தையோடு சென்னைக்கு வந்தார். போலீஸ் ஏட்டு தனம் உடன் வந்திருந்தார்.
சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகேயுள்ள தடய அறிவியல் துறையில் பாதிரியார் அமலநாதனுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது. அவரது ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. சுமித்ராமேரியின் ஆண் குழந்தையின் ரத்தமும் எடுக்கப்பட்டது.
இன்னும் ஒன்றிரண்டு நாளில் முடிவு தெரியும். பரிசோதனை முடிந்தவுடன் பாதிரியார் அமலநாதன் மீண்டும் தர்மபுரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.