காடுவெட்டி குரு பேச்சு-வீடியோ ஆதாரம் தந்த ஆற்காடு!
சென்னை: பெரம்பலூரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் வன்னியர் சங்கத் தலைவரும், பாமக முக்கிய பிரமுகருமான காடுவெட்டி குரு, முதல்வரையும், அமைச்சர்களையும் மிகக் கடுமையாகத் தாக்கி பேசிய வீடியோவை முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வழங்கினார்.
இனியும் திமுக கூட்டணியில் பாமகவை வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. எங்களால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனடியாக பாமகவை கழற்றி விடுங்கள் என்றும் அவர் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து நான்கைந்து நாட்களில் திமுக உயர்நிலை குழு கூடி இது தொடர்பாக முடிவெடுக்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக கடும் 'சண்டை' நடந்து வருகிறது. பாமக பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஒவ்வொரு முறையும் சண்டையில் இறங்கும். ஆனால் முதல்வர் கருணாநிதி ஒவ்வொரு முறையும் உரிய விளக்கத்தை அளித்து சமாதானத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.
மணல் விற்பனை, சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் கூடுதல்கட்டணம் வசூலிக்கப்படும் விவகாரம், சென்னை துணை நகரப் பிரச்சினை, விமான நிலைய விரிவாக்கத் திட்டம், மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அரசுடன் கடுமையாக மோதி வருகிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இதுதவிர தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்திலும் அரசை கடுமையாக சாடி வருகிறார். நேற்று செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், உளவுத்துறை அதிகாரிகள் ஜாபர்சேட் உள்ளிட்டோரின் பெயர்களைக் குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆற்காடு கோரிக்கை:
இந்த பின்னணியில் முரசொலி ஆசிரியர் சேதுவின் மகன் திருமணம் இன்று சென்னையில் நடந்தது. அதில் பாமகவை மிகக் கடுமையாக சாடிப் பேசினார் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி. இனியும் பாமகவை பொறுத்துக் கொள்ள முடியாது, தலைவரே, பாமகவை திமுகவிலிருந்து கழற்றி விட்டு விடுங்கள் என்றும் ஆற்காடு வீராசாமி கோரிக்கை விடுத்தார்.
முதல்வரிடம் வீடியோ தந்த ஆற்காடு:
அவர் பேசுகையில், பெரம்பலூரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் வன்னிய சங்கத் தலைவரான காடுவெட்டி குரு, முதல்வரையும், அமைச்சர்கள் சிலரையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். இதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்போது முதல்வரிடம் வழங்குகிறேன் (சில வீடியோ பதிவுகளை முதல்வரிடம் வழங்கினார்).
(கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராசாவின் தலையை வெட்டுவேன் என காடுவெட்டி குரு பேசியதாகக் கூறப்படுகிறது)
பாமகவினரின் பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எனவே தலைவரே, முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. உடனடியாக திமுகவிலிருந்து, பாமகவை கழற்றி விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications