நெட்ஒர்க்கில் கோளாறு: ஸ்தம்பித்த ரயில்வே ரிசர்வேசன்
சென்னை: சென்னையில் உள்ள ரெயில்வே கம்ப்யூட்டர் கட்டுப்பாடு அலுவலகத்தில் கோளாறு ஏற்பட்டதால், தமிழகம் முழுவதும் ரெயில் டிக்கெட் முன்பதிவு 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் புறநகர் ரெயில் நிலையத்தில் 10 மாடி கட்டிடத்தில் தெற்கு ரெயில்வேயின் கம்ப்யூட்டர் இணைப்பு கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ரெயில் நிலையங்களின் டிக்கெட் முன்பதிவு விவரங்கள் மற்றும் கேரளா, கர்நாடக மாநிலங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களின் விவரங்கள் இங்குள்ள கம்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் நேற்று காலை கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் வழங்கும் கம்ப்யூட்டர்கள் செயல் இழந்தன. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்வது பாதிக்கப்பட்டது. பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் வழங்க முடியாத சூழ்நிலை உருவானது.
விரைந்து வந்த அதிகாரிகள் பழுதான கம்ப்யூட்டரை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு பழுதான கம்ப்யூட்டர் சரி செய்யப்பட்டது. அதன் பிறகு பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.
கம்ப்யூட்டர் பழுது காரணமாக, ரெயில் நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்று சென்றனர். சில பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்க நேரம் ஆனதால் தங்கள் பயணங்களை ரத்து செய்து விட்டு வீடுகளுக்கு திரும்பினர்.
இந்தப் பிரச்சினை காரணமாக தமிழகத்தில் 94 முன்பதிவு மையங்கள், கேரளாவில் 44 மையங்கள், கர்நாடகாவில் 3 மையங்கள், ஆந்திராவில் ஒரு மையம், புதுச்சேரியில் 6 மையங்கள் உள்பட சுமார் 148 மையங்களில் முன்பதிவு டிக்கெட் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.
நடப்பு டிக்கெட்டுகள் கையினால் எழுதி கொடுக்கப்பட்டன. முன்பதிவில்லா டிக்கெட் வழங்கும் பணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications