8 லட்சம் கேஸ் இணைப்புகள்-தமிழகம் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் இலவச அடுப்பு-கேஸ் இணைப்பு திட்டத்துக்காக, 8 லட்சம் கேஸ் இணைப்புகளை வழங்க வேண்டும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவிடம் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேலு நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக அவர் மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவாரை சந்தித்து தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் வினியோகிக்க கூடுதலாக கோதுமையை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந் நிலையில் முரளி தியோராவையும் அவர் சந்தித்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆணைப்படி, உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் முரளி தியோராவை மத்திய தகவல் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசவுடன் சென்று சந்தித்தார்.
தமிழகத்தில் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2008-2009ம் ஆண்டில் ஏழை, எளிய மக்களுக்கு 8 லட்சம் இணைப்புகள் வழங்க ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகத்துக்கு 8 லட்சம் கேஸ் இணைப்புகளை உடனடியாக வழங்குமாறு தியோராவிடம் வேலு வலியுறுத்தினார். இதுகுறித்து பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தியோரா தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications