போலி தங்கப் புதையலை விற்க முயன்ற 2 பேர் கைது

சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்தவர் சுனில். இவர் அப்பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கிஷோர் என்பவர் ஒரு வயதான பெண்ணுடன் 2 நாட்களுக்கு முன்பு வந்தனர். சுனிலிடம், ஒரு பையைக் காட்டினர். அதில் தங்கக் காசுகளும், சங்கிலிகளும் குவியலாக இருந்தன.
இவை அனைத்தும் புதையலில் கிடைத்ததாகவும், பல கோடி மதிப்புடையது என்றும், இதை வெளியில் எங்கும் விற்க முடியாது. நீங்கள் ரூ. 40 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த சுனில், அவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள், எப்படி கிடைத்தது இந்த நகை என்று விசாரித்துள்ளார். அதற்கு கிஷோர், நாங்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள். வீடு கட்ட குவி தோண்டியபோது இதுகிடைத்தது என்று கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் காட்டிய நகைகள் போலியானவை என்பதை சுனில் கண்டுபிடித்து விட்டார். இதையடுத்து நாளை காலை வாருங்கள் பணம் தருகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார். பிறகு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
நேற்று காலை இருவரும் மீண்டும் சுனிலிடம் வந்தனர். அப்போது காத்திருந்த போலீஸார் இருவரையும் வளைத்துப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில், மொத்தம் 9 கிலோ மதிப்புடைய போலி தங்கக் காசுகளும், தங்கச் சங்கிலிகளும் இருந்தன. அனைத்தும் பித்தளையில் ஆனவை, கவரிங்.
கைது செய்யப்பட்ட கிஷோர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர். அந்தப் பெண்ணின் பெயர் கெளரி பாய்.இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். சென்னை சென்டிரல் ரயில்நிலையத்தில் பூ விற்றுவருகிறார்.
ரயில் நிலையத்தில் அவரை சந்தித்த கிஷோர், தனது மோசடிச் செயலுக்கு உடந்தையாக இருக்குமாறுகூறி கூட்டி வந்து, அவரைத்தனது தாயார் என்று சுனிலிடம் கூறியுள்ளார்.
இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications