மதுரை அருகே 6 வயது சிறுமி கடத்தி கொடூரமாக கொலை
மதுரை: மதுரை அருகே நில புரோக்கரின் 6 வயது மகளைக் கடத்தி ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டிய நபர், அந்தசிறுமியை பாறையில் அடித்து கொடூரமாக கொலை செய்தார்.
மதுரை அழகர் கோவில் அருகே உள்ள மூனூர் பாரஸ்ட் பங்களாவைச் சேர்ந்தவர் முத்தையா. இவர்ஒரு நில புரோக்கர். இவரது 6 வயது மகள் விஜி. 2ம் வகுப்பு படித்து வந்தாள் விஜி.
முத்தையாவின் வீட்டில் தங்கியிருந்தவர் பிரபு. 19 வயதாகும் பிரபு பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆரப்பள்ளத்தைச் சேர்ந்தவர். விஜிக்கு தினசரி பள்ளிப் பாடங்களை சொல்லிக் கொடுத்து வந்தார் பிரபு. விஜியும், பிரபுவிடம் அண்ணன் என்று அழைத்து பாசத்தோடு பழகி வந்தாள்.
இந்த நிலையில், முத்தையாவிடம் புரளும் பணத்தைப் பார்த்த பிரபுவுக்கு அவரிடமிருந்து பெரும் பணத்தைப் பறிக்கும் விபரீத ஆசை வந்தது. முதல் கட்டமாக வீட்டிலிருந்து பணத்தை திருட ஆரம்பித்தார்.
இதை அறிந்த முத்தையா, பிரபுவை திட்டிக் கண்டித்துள்ளார். பின்னர் வீட்டை விட்டும் அனுப்ப முயன்றார். ஆனால் விஜியோ, அண்ணனை அனுப்பக் கூடாது என்று அழுதுள்ளாள். இதைப் பார்த்த முத்தையா, பிரபுவை மன்னித்து வீட்டோடு வைத்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறினார் பிரபு. கடந்த 9ம் தேதி விஜி பள்ளிக்குப் போய் விட்டு வீடுதிரும்பியுள்ளாள். அப்போது விஜியைப் பார்த்த பிரபு அவளை அழைத்துச் சென்றார். விஜ பள்ளிமுடிந்து வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பதட்டமடைந்த முத்தையா, பிரபுதான் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று சந்தேகமடைந்தார்.
இதையடுத்து தனது உறவினர்களுடன் பிரபுவின் ஊருக்குச் சென்று அவரது தந்தை மனோகரனிடம் விசாரித்தார். ஆனால் பிரபு அங்குவரவில்லை என்று மனோகரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்முத்தையாவின் செல்போனில் பிரபு தொடர்பு கொண்டார். விஜி என்னுடன்தான் இருக்கிறாள். அவளை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 20 லட்சம் தர வேண்டும் எனமிரட்டியுள்ளார்.
இதையடுத்து முத்தையை அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார்தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் வத்திராயிருப்பு மலைப் பகுதியில், மாவூத்து கோவில் என்ற இடத்தில் சிறுமியுடன் பிரபு பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அந்த இடத்தில் பதுங்கியிருந்த பிரபுவை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். ஆனால் அவருடன் விஜி இல்லை.
விஜி குறித்துக்கேட்டபோது, உறவினர் வீட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ளார் பிரபு. ஆனால் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார் பிரபு. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரை முறைப்படி விசாரித்தனர்.
அப்போதுதான், பணம் கிடைக்காது என்ற பயத்தில் விஜியைக் கொன்று விட்டதாக கூறியுள்ளார் பிரபு. வத்திராயிருப்பு அருகில் உள்ள சதுரகிரி மலைப் பாறையில் அடித்து விஜியைக் கொடூரமாக கொன்ற பிரபு, உடலையும் அங்கேயே புதைத்து விட்டார்.
இதையடுத்து போலீஸார் பிரபுவை அழைத்துக் கொண்டு சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்தனர். அங்கு அழுகிய நிலையில் விஜியின் உடல் மீட்கப்பட்டது.
அண்ணன் என்று பாசத்துடன் பழகிய சிறுமியை கொடூரமாக கொன்ற பிரபுவின் செயல் அழகர் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications