திமுக மாநாடு: அழகிரி மகள் இன்று உரை-நேரடி அரசியலில் குதிக்கிறார்
முதலாவது திமுக மகளிர் அணி மாநாடு நேற்று கடலூரில் கோலாகலமாக தொடங்கியது. மஞ்சக்குப்பம் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பந்தலில் லட்சக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.
காலை 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி முன்னிலையில் வசந்தி கணேசன் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாநில மகளிர் அணிச் செயலாளர் சங்கரி நாராயணன் மாநாட்டுப் பந்தலைத் திறந்து வைத்தார்.
பிற்பகலில் பிரமாண்டப் பேரணி நடந்தது. சில்வர் பீச்சில் தொடங்கிய பேரணியை மாநில மகளிர் அணித் தலைவி நூர்ஜஹான் பேகம் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
லட்சக்கணக்கான மகளிர் அணியினர் பேரணியில் நடந்துவந்தனர். பேண்டு வாத்திய குழுவினர் முன் செல்ல கனிமொழி எம்.பி, சற்குண பாண்டியன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் பேரணியில் நடந்துவந்தனர்.
முதலில் கடலூர் மாவட்ட மகளிர் அணியினர் அணிவகுத்துச் சென்றனர். பின்னர் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணியினர் நடந்து சென்றனர்.
கடலூர் மாவட்ட அணியினர் கருப்பு, சிவப்பு நிற சுடிதாரில் அணிவகுத்துச் சென்றது வண்ணமயமாக இருந்தது.
தப்பாட்டம், கரகம் உள்ளிட்ட ஆட்டங்களுடன் மகளிர் அணியினர் சென்றது கண்ணைக் கவரும் வகையில் இருந்தது.
சேலம் மாவட்டமகளிர் அணியினர் கருணாநிதியின் உருவம் பொறித்த மஞ்சள் நிற சேலையுடன் பேரணியில் நடந்துசென்றனர்.
இந்தப் பேரணியை பீச் சாலையில் உள்ள தனி மேடையில் இருந்தபடி முதல்வர்கருணாநிதி பார்வையிட்டார். அவருடன் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, மு.க.அழகிரியின் மகள் கயல் விழா, அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
நேற்றைய பேரணியின் இறுதியில்,கனிமொழி பேசுவதாக இருந்தது. ஆனால் பேரணி முடிய நீண்ட நேரமானதால் அவரது உரை இன்று இடம் பெறும் என அறிவிக்கப்பட்டது.
அரசியலுக்கு வருகிறார் அழகிரி மகள் கயல்விழி:
இன்று 2வது நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்றைய நிகழ்ச்சி சமூக சீர்திருத்த மாநாடாக நடைபெறவுள்ளது.
இன்றைய நிகழ்ச்சியில் மு.க.அழகிரி மகள் கயல்விழி தனது அரசியல் பிரவேசத்தை அரங்கேற்றுகிறார். வள்ளுவரும் வாய்மையும் என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கயல்விழி திமுக மேடையில் பேசுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் அவரும் தீவிர அரசியலுக்கு வருகிறார்.
இன்று காலை 10 மணிக்கு காஞ்சனா கமலநாதன் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் தலைவர்களின் படங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. பெரியார் படத்தைத் திறந்து வைத்து கனிமொழி உரை நிகழ்த்துகிறார்.
அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். இரவு 8 மணியளவில் முதல்வர் கருணாநிதி நிறைவுரை நிகழ்த்துகிறார்.
மகளிர் அணி மாநாட்டையொட்டி கடலூர் நகர் முழுவதும் திமுக மகளிர் மயமாக காட்சி அளிக்கிறது.













Click it and Unblock the Notifications