கருணாநிதிக்கு மார்க் போட இன்னும் யாரும் பிறக்கவில்லை: கனிமொழி ஆவேசம்

கடலூரில் திமுக மகளிர் அணி மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று பெரியார் படத்தை திறந்து வைத்து கனிமொழி பேசியதாவது:
தனியாக மகளிர் அணி மாநாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பல வருடமாக கலைஞரிடம் முன் வைத்தார்கள். அதற்கு இப்போது தான் அனுமதி கிடைத்திருக்கிறது.
இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தியிருக்கிறோம்.
பெண்களுக்காக உண்மையிலேயே குரல் கொடுக்கும் ஒரே கட்சி திமுக தான். ஒரு சட்டம் இயற்றப்படும்போது பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் விடுபடாமல் அவர்களுக்கும் நன்மைகள் கிடைக்க குரல் கொடுக்கும் கட்சி திமுக.
நேற்று இங்கு நடந்த திமுக மகளிரணி பேரணி ஒரு மாபெரும் வெற்றிப் பேரணி. அதை நேற்று வந்த கூட்டத்தை வைத்து சொல்லவில்லை. அதில் வந்த பெண்களின் எழுச்சியை வைத்து சொல்கிறேன்.
இங்கே தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைத்து அகமகிழ்ந்து, நெகிழ்ந்து நிற்கிறேன். இந்த மாநாட்டில் இத்தனை லட்சம் பெண்கள் சமையல் அறையை தாண்டி வந்து கலந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு பெரியார் தான் காரணம்.
நாம் கடந்த காலத்தை சரியாக தெரிந்து வைத்திருப்பதில்லை. மூட நம்பிக்கைக்கு எதிராக பெரியார் பாடுபட்டார். சாதிக் கொடுமைக்கு எதிராக போராடினார். கோவில் கருவறைக்குள் எல்லோராலும் நுழைய முடியாத நிலை இருந்தது. அதற்காக பெரியார் போராட்டம் நடத்தினார்.
தமிழக மக்களை மூட நம்பிக்கையில் இருந்து விடுபட பகுத்தறிவு பகலவனாக விளங்கியவர் பெரியார்.
அவரது வாழ்க்கையே போராட்டமாகத் தான் இருந்தது. வைக்கம் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்க கோரி போராட்டம், குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம், அரசியல் சட்ட எதிர்ப்பு போராட்டம் என தொடர் போராட்டமே அவரது வாழ்க்கையாக இருந்தது.
பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அவரது தீர்மானத்தை 60 ஆண்டுக்குப் பிறகு கருணாநிதி நிறைவேற்றியிருக்கிறார்.
பெரியாரின் கனவுகளை நிறைவேற்றி வரும் முதல்வர் கருணாநிதிக்கு எப்போதும் எதிர்ப்புகள் அதிகமாகத் தான் இருக்கும். எதிர்ப்பு என்ற எதிர் நீச்சலில் வளர்ந்தவர் தான் டாக்டர் கலைஞர்.
இதற்காக பெரியாரே 'டாக்டரை' பாராட்டியிருக்கிறார். நான் 'டாக்டர்' என்று சொல்வது வேறு யாரையும் அல்ல, நமது முதல்வரைத் தான் தான். நீங்கள் வேறு யாரையும் (ராமதாஸ்) என்று எண்ணி விட வேண்டாம்.
பெரியாரிடம் பயின்று 'பாஸ்' ஆனவர் தான் கலைஞர். அவருக்கு 'மார்க்' போட இன்னும் யாரும் பிறக்கவில்லை. அவருக்கு யாரும் மார்க் போடவும் முடியாது. (திமுக அரசுக்கு சமீபத்தில் டாக்டர் ராமதாஸ் பெயில் மார்க் போட்டு பேசியது நினைவுகூறத்தக்கது)
குஜராத்தில் இனவெறியை கண்டோம். இதற்கு காரணம் நரேந்திர மோடி. அந்த மோடிக்கு சிவப்பு கம்பளம் அளித்து வரவேற்றவர் தான் ஜெயலலிதா. அவர்களுக்கு இந்துத்துவா கொள்கை தான் முக்கியம்.
குஜராத்தில் வன்முறை என்றால் தமிழ்நாட்டிலும் ஜெயலலிதா ஆட்சியின் போது ஏகப்பட்ட அடக்குமுறைகள். அரசுப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்களை அடக்கியே தீருவேன் என்று பலரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பினார்.
ஜெயலலிதாவுக்கும் நரேந்திர மோடிக்கும் அதிக வேறுபாடு கிடையாது. ஜெயலலிதாவை வளர விட்டால் தமிழகமும் குஜராத்தாக மாறும் தூரம் வெகு தொலைவில் இல்லை.
ஒருவர் புதிதாக ஒரு கட்சி தொடங்கி உள்ளார். அவர் கலைஞரின் செயல்பாட்டை விமர்சனம் செய்கிறார். பின்னர் நிலைமையை புரிந்து கொண்டு மாற்றி பேசுகிறார். பெரியார் யார்?, அவர் வழி வந்தவர் யார்? என்று தெரிந்து பேசுங்கள். தெரியாமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
இன்று வெற்றி மாநாடு கண்ட நாம் பகுத்தறிவு என்ற தீப்பந்தத்தோடு கலைஞர் பின் அணி வகுப்போம் என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications