தூத்துக்குடி அருகே 10 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான சாகர் என்ற கப்பல் மணப்பாடு அருகே கடலில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு இலங்கையை சேர்ந்த 2 படகுகளில் 10 பேர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை கைது செய்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு நள்ளிரவு கொண்டு வந்தனர். இது தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 இடங்களில் கடலோர காவல் நிலையங்கள்:
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், குமரி மாவட்டத்தில் குளச்சல் மற்றும் ராமநாதபுரம், வேதாரண்யம், கடலூர் உள்ளிட்ட 12 இடங்களில் கடலோர காவல் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்தது.
ஆனால், தருவைகுளம், கூடங்குளம் உள்ளிட்ட 8 கடலோர காவல் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், முறையாக இயங்கவில்லை. இந் நிலையில் அனைத்து கடலோர காவல் நிலையங்களையும் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட எஸ்பிக்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலோர காவல் நிலையங்களுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் போலீசாரை நியமித்து அவர்கள் அனைவரையும் வரும் 16ம் தேதிக்குள் எஸ்.பி அலுவலகங்களில் தங்கள் பணியை ஏற்க வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம், தருவை குளம் கடலோர காவல் நிலையத்திற்கு முதற்கட்டமாக சப்-இன்ஸ்பெக்டர்கள் நீலகண்டன் தலைமையில் 5 ஏட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் கடலோர பாதுகாப்பு பயிற்சி பெற்ற 12 தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும் நியமிக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications