மக்கள் எதிர்பார்க்கும் 'கருப்பு எம்ஜிஆர்': விஜய்காந்த்

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர். அப்போது விஜய்காந்த் பேசுகையில்,
தேமுதிகவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சேர சேர எனக்கு பயம். ஏனென்றால் நம்பி வருகிற மக்களை கஷ்டப்படுத்தி விடக்கூடாது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வை எதிர்த்து முதன் முதலில் போராட்டம் நடத்தியது நாங்கள்தான். இப்போது எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். உயர்ந்துவிட்ட விலைவாசியை இவர்கள் குறைப்பார்களா?. விலைவாசி குறையும் என்று நம்புவதாக பிரதமரும், ப.சிதம்பரமும் கூறி வருகிறார்கள்.
எந்த காலத்தில் ஏறிய விலைவாசி இறங்கியிருக்கிறது. மக்களிடம் வாங்கும் சக்தி இருப்பதாக சொல்கிறார்கள். பாவம் ஏழைகளுக்கு தாங்கும் சக்தி வேண்டாமா?
ஊழலையும், வறுமையையும் ஒழிப்பேன் என்று கட்சி தொடங்கியது முதல் சொல்லி வருகிறேன். ஆனால் எப்படி முடியும் என்று கேட்கிறார்கள். விலைவாசியை மட்டும் குறைக்க முடியும் என்றால் ஊழலை ஒழிக்க முடியாதா?.
விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாது என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல், டீசலுக்கு ரூ. 3 லட்சம் கோடி மானியம் கொடுக்கிறார்களாம். அதில் ரூ. 1 லட்சம் கோடியை விவசாய தொழிலுக்கு கொடுத்திருந்தால் விவசாயமாவது வளர்ந்திருக்கும்.
எங்கு பார்த்தாலும் தொழிற்சாலை கட்டுகிறார்கள். காரணம் அதில் கோடி கோடியாய் லஞ்சம் வருகிறது.
மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்து விடாதீர்கள் என்றார்கள். இப்போது 'சேதுராம்' என்று வைத்தாலும் பரவாயில்லை, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்கிறார்கள். அவர்களுக்கு தேவை என்றால் சாதியும் இல்லை, மதமும் இல்லை.
எம்.ஜி.ஆர். ஆட்சியை தருவேன் என்று ஜெயலலிதா சொல்கிறார். காமராஜர் ஆட்சியை தருவோம் என்று காங்கிரசார் சொல்கிறார்கள். அப்படியானால் உங்களது ஆட்சியின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?. மக்கள் இன்னொரு எம்.ஜி.ஆரை எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்றார்கள்.
விலைவாசி ஏறியதுபோல ஓட்டுக்கும் விலை ஏறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ. 2,000க்கும் மேல் தருவார்கள். தருவதை வாங்கிக் கொள்ளுங்கள். ஓட்டை எங்களுக்கு போடுங்கள்.
யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதை கடவுளும், மக்களும் தான் முடிவு செய்வார்கள்.
நான் கூட்டணி அமைப்பேன் என்று இதுவரை பேசியது இல்லை. நான் தனித்து நிற்பேன். எனது கூட்டணி மக்களோடுதான். நான் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது.
கூட்டணியில் இருந்து கொண்டே விலைவாசியை எதிர்ப்பார்களாம். ஆனால் கூட்டணியை விட்டு வெளியே வர மாட்டார்களாம். யாரை ஏமாற்றுகிறார்கள்.
ஒவ்வொரு கட்சியும் குழப்பத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறது. எந்த குழப்பமும் இல்லாத ஒரே கட்சி தேமுதிக தான். வரும் தேர்தலில் 2 கூட்டணிகளையும் தூக்கி வீசுங்கள். புதிய சிந்தனை, புதிய கொள்கைகளுக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications