20 ஆண்டு காலமாக நடந்த வழக்கில் ஜான் பாண்டியன் விடுதலை
நெல்லை: நெல்லை நீதிமன்றத்தில் போலீஸ் வாகனம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் விடுதலை செய்யப்பட்டார்.
1987ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி நெல்லை நீதிமன்ற வாளகத்தில், ஜான் பாண்டியனும், கராத்தே செல்வினும் சந்தித்துக் கொண்டனர். அப்போது அங்கு ஏற்பட்ட திடீர் மோதலில், போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பாளை போலீசார் ஜான்பாண்டியன் உள்பட 44 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களில் 15 பேர் தவிர மற்ற அனைவரும் மாணவர்கள் என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மற்ற 15 பேர் மீதும் மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் ஜான் பாண்டியன், ஜோசுவா, ஜோசப், காமராஜ் தவிர மற்றஅனைவரும் வழக்கு நிலுவையில் இருந்தபோது இறந்து விட்டனர். ஜான்பாண்டியன் ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற மூவரும் ஜாமீனில் விடுதலையாகி இருந்தனர்.
20 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. தற்போது அனைத்து சாட்சி விசாரணைகளும் முடிந்து எதிர் மற்றும் அரசு தரப்பு வக்கீல்கள் வாதங்களும் நிறைவடைந்துவிட்டன.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையொட்டி சேலம் சிறையிலிருந்து ஜான் பாண்டியனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். ஜோசுவா, காமராஜ், ஜோசப் ஆகியோரும் ஆஜரானார்கள்.
பின்னர் நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார். நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால் நான்கு பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து ஜான் பாண்டியன் நீதிமன்ற வளாகத்திற்குள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஜான் பாண்டியனுக்கு மாலை அணிவித்தனர்.












Click it and Unblock the Notifications